பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

4. ஐரோப்பியர்கள் இந்தியர்களை இழிவாக நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணம் என்கிறார்.

இந்து தேசத்திலுள்ள மநுக்களில் ஆறு பேருக்கு ஒருவராகத் தோன்றி தேகத்தை வருத்திச் சம்பாதிக்கக் கூடியவர்களும் சாதி பேதமில்லா விவேகிகளும் ஆனோர்களைப் பறையர்களென்றும் தீயர்களென்றும் சண்டாளர்களென்றும் இழிவு கூறி வருவதும் அன்றி மற்றவர்கள் பிரிட்டிஷ் துரைத்தனத்தில் அடைந்து வரும் சுதந்திரங்களை இவர்கள் அடைய விடாமலும் இழிவு கூறித் தாழ்த்தி வருவதை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

5. ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் இந்தியர்களின் நியாயமான விருப்பங்களை நிந்தித்துப் பேசி வர அப்பத்திரிகைகளை மதித்து கவர்மென்டார் நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணம் என்கிறார்.

இந்து தேசத்தின் பூர்வக்குடிகளும் சகல சாதியாருக்குள்ளும் பெருந்தொகையினரான பூர்வ பெளத்தர்களைப் பறையர்களென்றும் தாழ்ந்த சாதிகளென்றும் வகுத்துப் பொய்ச் சரித்திரங்களை ஏற்படுத்திப் புத்தகங்களில் அச்சிட்டுக் கொண்டு கூத்து மேடைகளில் அவமானப்படுத்தி வருவதும் ஆகிய பொறாமைச் செயல்களை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

6. வங்காளத்தை இரண்டு பிரிவினையாகப் பிரித்துவிட்டதே அமைதியில்லாச் செயலுக்குக் காரணம் என்கிறார்கள்.

இந்து தேசத்தில் சாதியுள்ளவர்கள் யாவரும் ஒரு பிரிவு சாதியில்லாதவர்கள் யாவரும் ஒரு பிரிவென்று இரண்டாகப் பிரித்துச் சாதியுள்ளவர்கள் மட்டிலும் தங்கள் கலாசாலைகளிலும் கைத்தொழில் சாலைகளிலும் வந்து கற்றுக் கொள்ளலாமென்றும் சாதியில்லாதவர்கள் வரலாகாதென்றும் ஐயர்கள் வாசம் செய்யும் இடங்களை ஐயர்கள் வீதியென்று கூறாமலும் நாயுடுகள் வாசம் செய்யும் வீதிகளை நாயுடு வீதிகளென்று கூறாமலும் முதலிகள் வாசம் செய்யும் வீதிகளை முதலிகள் வீதிகள் என்று கூறாமலும் பூர்வ ஏழைக்குடிகள் வாசம் செய்யும் இடங்களுக்கு மட்டிலும் மயிலாப்பூரான் பறைச்சேரி வீதி, இராமசாமி முதலி பறைச்சேரி வீதியென்று போர்டுகளில் எழுதியே பிரித்து இழிவு கூறி வருகிறார்கள். ஒர் தேசத்தை இரண்டாகப் பிரித்ததற்கே தோஷம் கூறிய பானர்ஜியவர்கள் மநுக்கூட்டத்தோர்களையே இரு வகையாகப் பிரித்து இழிவு கூறி வருவதை அறியார் போலும்.

அந்தோ நமது கனந்தாங்கிய பானர்ஜியார் இந்தியாவில் உள்ள இத்தியாதி ஒற்றுமைக் கேடுகளையும் உணராது அமைதியற்ற நிலைக்குக் கூறிய அறுவகைக் காரணங்களும் வீணேயாம் (அலாய்சியஸ் 1176 - 77).