பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


ஒரு மனிதர் அல்லது நிகழ்ச்சி அல்லது குழு அல்லது நிறுவனம் பற்றிப் பேசும்போது அதனையொத்த மனிதரோடு அல்லது நிகழ்ச்சியோடு அல்லது குழுவோடு அல்லது நிறுவனத்தோடு ஒப்பிட்டுக் காட்டி நிறைகுறைகளைப் பேசுவது தாசர் அவ்வப்போது கையாளும் உத்தியாகும். இந்தியப் போலீசு பற்றிக் குறிப்பிட விரும்பும்போது,

ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த பஞ்சாபி ஒருவன் ஒர் ஐரோப்பியரைச் சுட்டுவிட்டபோது ஐரோப்பியப் போலிஸ் உத்தியோகஸ்தர்கள் யாவரும் பஞ்சாபி ஒருவரை மட்டிலும் பிடித்துக் கொண்டு அவனைக் கைதியாக்கிக் கொலையின் குற்றத்தை ரூபித்தார்களன்றி அவனருகில் இருந்தவர்களையும் அவனது நேயர்களையும் பிடித்து உயத்திரவம் செய்தது கிடையாது. நமது இந்து தேசத்திலுள்ள இந்தியப் போலீசு உத்தியோகஸ்தர்களோ என்றால் கொலை செய்தவன், கொலை செய்தவனுக்கு அருகில் நின்றவன், அருகில் நின்றவனை அடுத்துப் பார்த்தவன், அடுத்துப் பார்த்தவனை முடுத்துப் பார்த்தவன் யாவரையும் சேர்த்துக் கொண்டு போய் கைதியாக்கி விசாரினை நிறைவேறுங்கால் கொலை செய்தவன் இன்னான் கொலைக்கு உதவியாளன் இன்னான் கொலை செய்யாதவன் இன்னானென்று ரூபிக்கப் பாங்கில்லாது கொலை செய்தவனே தப்பித்துக் கொள்ளுகின்றான் (அரலாய்சியஸ் I 197).

என்றெழுதுவார்.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைப் பற்றியெழுத நேர்ந்தபோது சென்னைக் கத்தோலிக்கர்களையும் புதுவைக் கத்தோலிக்கர் களையும் ஒப்பிடுவார். சென்னைக் கத்தோலிக்கக் குரு ஒருவர் கத்தோலிக்கரால் தாக்கப்பட்ட நிகழ்ச்சியையும் புதுவைக் கத்தோலிக்கக் குரு ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியினரை இழிவாக நடத்தியதையும் எடுத்துச் சொல்லி,

கத்தோலிக்கப் பாதிரிமார்களே, இவைகளைச் சற்றுக் கண்ணோக்கிக் கவனியுங்கள். சென்னையில் பாதிரியாரை அடித்துக் கோர்ட்டு வழக்கில் இருப்பவ்ர்களும் கிறிஸ்தவர்களே. புதுவையில் பாதிரியாரால் அவமானப்பட்டுக் கோர்ட்டிற்குப் போயிருப்பவர்களும் கிறிஸ்தவர்களே. ஆதலின் இவ்விரு கிறிஸ்தவர்களுள் குருவை அடித்தவர்கள் யதார்த்தக் கிறிஸ்தவர்களா இவர்களுள் யாரால் கிறிஸ்து மார்க்கம் சிறப்படையும். பாதிரிகளே, பணவரவைப் பாராதீர்கள். ஞானவாட்களாம் குணவரவைப் பாருங்கள், குணவரவைப் பாருங்கள் (அலாய்சியஸ் I 193).

என்று அறிவுரை கூறி முடிப்பார்.

“பாதிரிகளுக்கோர் விண்ணப்பம்” எனும் நீண்ட கட்டுரையில் கத்தோலிக்கப் பாதிரியார்களும் பிராட்டெஸ்டெண்ட்