பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

வற்றிற்கு மனுதன்ம நூலொன்றும் மனுதரும சாஸ்திரமென்றும் மனு நீதியென்றும் வழங்கலாயிற்று (அலாய்சியஸ் II 442).

மனுவென்னும் மகாஞானியார் பிரஜாவிருத்தி யென்னும் அரயனுக்குப் போதித்த சத்திய தன்மமும் அதை அனுசரித்து நடந்ததினாலடைந்த சுகபலனையும் விளக்கிய நூலுக்கு மநுஸ்மிருதியென்றும் மநுதன்ம சாஸ்திரமென்றும் கூறப்படும்.

இத்தகையாய் வழங்கி வந்த பெளத்த தன்ம நூல்களும் அதனதன் சாராம்ஸங்களும் அஞ்ஞானிகளாகிய இவ்வேஷப் பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் தங்கள் தங்கள் வேஷப் பிராமணச் செயலை விருத்தி செய்து சுயப் பிரயோசனத்தில் சுகிப்பதற்கு மேற்கூறிய பதினெட்டு இஸ்மிருதிகளாம் தன்ம சாஸ்திரங்களின் சாராம்சங்களை முற்றும் அறிந்தவர்கள் போல் மநுஸ்மிருதியென்றும் மநுதன்ம சாஸ்திரமென்றும் ஓர் அதன்ம நூலை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

தங்களுடைய அதன்ம நூலையே தன்ம நூலாக ஒப்புக் கொள்ள வேண்டுமென்னும் அட்டவணையைப் போட்டுக் கொண்டு தங்கள் சுயசீவனத்திற்கான வழிகளையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டார்கள். அவற்றுள்ளும் வருணமென்னும் மொழி நிறத்தைக் குறிக்கக்கூடியது என்று உணராது அவைகளையே ஒவ்வோர் சாதிகளாக எழுதியுள்ளார்கள் . . .

மனுமக்களின் ஒற்றுமைக்குக்கேடாய வருணாசிரமங்களைச் சொல்லும்படி ஓர் ரிஷியைக் கேட்டதாகவும், அவர் வருணாசிரம தன்மங்கள் ஓதியதாகவும் வரைந்து வைத்துள்ளார்கள். உலகத்தில் தோன்றும் பொருட்களும் அழியும் பொருட்களும் பிரத்தியட்ச காட்சியாயிருக்க வருணாசிரம தோற்றத்தை மட்டிலும் ஒருவன் கேட்கவும் மற்றவன் சொல்லவும் ஏற்பட்டது மிக்க விந்தையேயாம். ஈதன்றி தன்மமென்னும் மொழியானது சீவராசிகளீராக மனுமக்கள் வரை பொதுவாயுள்ளதேயாம் (அலாய்சியஸ் I 672-3).

அதில் கூறியுள்ள அனுலோம சாதி, பிரதிலோம சாதி, அந்தராள சாதி, பாகிய சாதியானோர் ஒருவருந் தோன்றாமல் அந்நூலில் கூறியில்லாத முதலியார் சாதி, நாயுடு சாதி, செட்டியார் சாதி, நாயகர் சாதி முதலியோர் தோன்றி விட்டார்கள் (அலாய்சியஸ் I 674).

கொழுத்த பசுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு எதேஷ்டமாகத் தின்பதற்குப் பிரம்மாவானவர் பசுக்களை எக்கியத்திற்கே சிருஷ்டித்திருக்கிறாரென்று இம்மனு நூலில் எழுதி வைத்துக் கொண்டவர்கள் பெளத்தர்களது தேசத்தில் பசுவைக் கொல்லும் எக்கியத் தொழிலை மறந்தே விட்டு விட்டார்கள். இவர்கள் எழுதியுள்ளபடி பிரம்மாவானவர் எக்கியத்திற்கென்றே பசுக்களை