பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 69

சாதி தருமங்களைக் கடைப்பிடிக்காத மனிதர்களுக்காக நரகம் காத்திருக்கிறதென்பதை நாம் கேள்விப்பட்டதில்லையா? (1. 40-44)

வேள்வியின் இன்றியமையாமையைக் கண்ணன் பார்த்தனுக்கு எடுத்துச் சொல்லும்போது காலத்தாலும் இடத்தாலும் மனித குலம் முற்றுக்கும் பொருந்தும் அறம் பேசப்படவில்லை.

வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர ஏனைய தொழில்களெல்லாம் மனிதருக்குத் தளையாகிறது. எனவே பற்றை நீக்கித் தொழில் செய்வாய்.

முன்பு பிரம்மதேவன் மனிதரையும் வேள்வியையும் ஒரே சமயத்தில் படைத்துச் சொன்னான்: “வேள்வியில் பல்கிப் பெருகுவீர்கள்; வேள்வியால் நீங்கள் விரும்பியவற்றையெல்லாம் அடைவீர்கள்.

வேள்வியால் தேவர்களைப் போற்றுங்கள்; அப்பொழுதுதான் அவர்கள் உங்களை விரும்புவார்கள்; அவர்களோடு இணைந்திருந்தால் உயர்ந்த தவத்தை அடைவீர்கள்.

நீங்கள் செய்யும் வேள்வியால் மகிழ்வடைந்து தேவர்கள் நீங்கள் கேட்பவற்றையெல்லாம் கொடுப்பார்கள்; தேவர்களுக்குக் கைம்மாறு செய்யாமல் அவர்கள் கொடுப்பதைத் துய்ப்போர் கள்வராவார்.

வேள்வியில் எஞ்சியதை உண்ணும் நல்லவர்கள் பாவங்களிலிருந்து விடுபடுகின்றார்கள். தமக்காக மட்டும் உணவு சமைக்கும் தீயவர்கள் உண்ணும் உணவு பாவமே.

உணவால் உயிர்கள் வாழுகின்றன. மழையால் உணவு கிடைக்கின்றது. வேள்வியே மழையை விண்ணிலிருந்து கொண்டு வருகின்றது. வேள்வி புனிதமான செயலாகும்” (3. 9-14).

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று பேச வேண்டிய நூல் பல தேவர்களை வேள்வியால் களிப்படையச் செய்து நலன் பெற வேண்டும் என்று அறிவுரை கூறுவது விந்தையானது.

“உலக மக்களெல்லாம் என்னுடைய குழந்தைகள், நான் அவர்கள் யாவரிடமும் ஒரே விதமான அன்பைச் செலுத்துகிறேன்” என்று சொல்ல வேண்டிய இறைவன், “நான்கு வருணங்களும் என்னிடமிருந்தே தோற்றம் பெற்றன. அவரவர் தன்மைக்கும் தொழிலுக்கும் நீதி செய்யும் வகையில் இவ்வருணங்களைச் சமைத்தேன். அழிவற்றவனும் செய்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவனுமாகிய நான் இதனைச் செய்தேன் என்று அறிந்து கொள்” (4:13) என்று சொல்கிறார்.