பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 91

பேரின்பத்தில் யேக பாவனையாய் உள்ளடங்குமாயின் தாமரைக் கண்ணன் உரகாரும் புத்தேழ் உலகில் சிற்றின்பத்திற்கு மேலாய பேரின்பத்தில் சதா சுகிர்ப்பர் என்று கூறுவதற்காய்

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு

...... காமத்தால் சிற்றின்பம் நுகர்ந்து நீர் கெடுவதினும் என்று மழியாப் பேரின்பம் நுகர்ந்து நித்திய வாழ்வு அடைவதே அழகாதலின் சிற்றின்பத்தைச் செவ்விதில் விளக்கிப் பேரின்பம் அவாவும் போக்கில் விடுத்திருக்கின்றார் (அலாய்சியஸ் II 545).

வள்ளுவர் காமத்துப்பாலில் பேசும் சிற்றின்ப நுகர்ச்சி, பேரின்பத்தைப் பற்றிய மறைமுக விளக்கமே என்று தொ.பொ. மீனாட்சிசுந்தரனார் கூறியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.

வள்ளுவர் காமத்தைச் சிறப்பித்துப் பேசலாமாவென்று கேட்பவர்களுக்குத் தாசர்,

உலகின் மனுக்குலத்தோற்ற சருவ ஆடம்பரங்களும் காமியத்தையே பிடமாக வகுத்துள்ளதை அறியாத அதைச் சிறப்பித்தது தவறென்று கூறுதல் உள்ளுக்குக் காமியச் சிறப்பை ஒளித்து வெளிக்குத் தூற்றுவதொக்கும். நாயனார் அங்ஙனம் ஒளியாது மக்களின் சருவ செயல்களையும் அளந்து கூறிய விடத்து காமத்துப்பாலையும் தெள்ளற விளக்கிவிட்டார்; காரணம், இன்பத்தையும் துன்பத்தையும் விளக்கும் ஒர் போதனா நிலையாகும் (அலாய்சியஸ் II 546).

என்று விடை தருவார்.