இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒரு மாணவன்
மகாத்மாவாகிறான்!
நுழைவாயில்
கல்லூரியின் குரல்
அன்பார்ந்த மாணவர்களே!
அது ஓர் அழகிய பழம் பெரும் கல்லூரி. இயற்கையின் எழிலை எல்லாம் ஓர் இடத்திலே குவித்தாற்போல் அதை உருவாக்கியவர்கள் அப்படி அமைத்திருந்தார்கள். அழகுடன் கூடிய, மிகச் சிறந்த அறிவுச்சாலையாகவும் அந்தக் கலைமகள் கல்லூரி விளங்கியது. அக்கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று உயர்ந்தோர்தான் எத்தனை எத்தனை பேர்.
பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், வக்கீல்கள், விஞ்ஞானிகள், பொறி இயல் வல்லுனர்கள். இப்படிப் பலப்பல துறைகளில் மாமேதைகளாக விளங்கினவர்களையும் விளங்குபவர்களையும் எண்ணி எண்ணிப் பெருமையுடனும், உற்சாகத்துடனும் தலை நிமிர்ந்து நிற்கும் அக்கல்லூரியின் அடித்தளத்தில், இன்று ஏதோ மாளாச் சோகம்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.