பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


அமெரிக்காவின் மலிவுப் புத்தகங்கள் முதலியவற்றையே மிகுதியும் ரசித்து மகிழும் குமாரி செல்வாவின் பண்பிலே கிழக்கும் மேற்கும் கலந்த அவியற் கலாசாரத்தைக் காண முடிவதில் வியப்பில்லை என்று முடிவு கட்டினார் அவர்.

'இருக்கட்டுமே! அதனால் ஒன்றும் முழுகிவிடவில்லை. குமாரி செல்வா அழகி. விளையாட்டுப் பருவம். ஜாலியாக வாழும் ஆசை அவள் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது, களங்கமில்லை. கவலையில்லை. கூத்தடிக்கும் சிறுபிள்ளைத்தனம். வாழ்க்கையை விளையாட்டாகவே மதித்து நாளோட்டுவதினால் எவ்வித நஷ்டமும் வந்து விடப் போவதில்லையே!' என்று பேசியது மனம்.

மனக்குறளியின் மற்றொரு பண்பு குரல் கொடுத்தது. 'இப்படி எங்கும் எல்லோரிடமும் தாராளமாகப் பழகினால் என்னாவது? அவள் கெட்டுப்போக நேரிடும். சந்தர்ப்பமும் சமுதாய நிலையும் துணையற்ற பெண்ணை-அதிலும் தாராளமாகப் பழகுகிற குமாரியை-புனிதையாய் வாழவிடாது. அவள் பண்பாடே அவளுக்குத் தீங்கு பயக்கும் கருவியாகி விடும்.'

'உம். கெடவேணும் என்றிருந்தால் எந்தப் பண்பாட்டினரும் கெட்டு நாசமாகத்தான் போவார்கள். படியாத பெண்களும், பிரைமரியை மட்டுமே தாண்டிய அச்சம்-மடம்-பயிர்ப்புநாணத் தனக் குமரிகளும் கறை படிந்த மலர்களாகி விடவில்லையா? சினிமாவைப் பார்த்துவிட்டு, சினிமாச் சிங்காரிகளின் பகட்டான வாழ்வை யறிந்து, தாங்களும் அவ்வித மத்தாப்பூ சுந்தரிகளாக மாறிப் பலரையும் தம் அழகு வெளிச்சத்தினால் கிரங்கடிக்க வேணும் என்ற ஆசை கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளுகிற பாவையரின் எண்ணிக்கைதான் குறைவா என்ன! வளர்ந்துவரும் நாகரிகம் நன்மைகளுடன் பல நாசங்களையும் தூவி வருகிறது. என்று பேசியது அவர் மனம்.

'அவளது குறைகள் நிறைவுகள் எவையே யாயினும் சரி, குமாரி செல்வா ரொம்ப நல்ல பெண்' என்று ஸர்டிபிகேட் கொடுத்தார் அவர்.

ஆமா. அதிலே சந்தேகமே கிடையாது. அவள் மனுச் செய்துகொண்டால், அவளையே எனது காரியதரிசியாக ஏற்றுக் கொள்வேன்' என்று எண்ணிச் சிரித்தது அவர் உள்ளம்.