பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


அவள் புரிந்துகொள்ள முடியாமல் விழித்தாள்.

'இன்று 31 1/4 அங்குலம் என்று பேட்டியில் எழுதியிருந்ததை அன்று ஆட்சேபித்து அளந்து பார்க்கச் சொன்னீர்களே. இன்று அதை நீங்கள் மறுக்க முடியாது. ஆகவே எனது எழுத்திலே தீர்க்க தரிசனமான உண்மை ஏழு வருஷங்களுக்கு முன்பு தானாகவே வந்து விழுந்திருக்கிறது!’

அவருடைய ஹாஸ்யத்தை ரசிக்க முடியாமல் நிற்க இயலவில்லை அவரால். அதனால் சிரித்தார். பலமாகச் சிரித்தார். அப்பாவி மனுஷன் அந்தச் சிரிப்பாலேயே ஜீவனிழந்து செத்துப் போவாரோ என்று மற்றவர்கள் அனுதாபப் படும்படியாகச் சிரித்தார். குமாரியின் பேட்டிகள் அவரது நினைவில் அவ்வளவு பசுமையாய்ப் பதிந்திருந்தன.

அவள் வெட்கமுற்று முகம் சிவந்து நின்றாள். பாதி தின்ற மாம்பழம் அவள் கையிலே இருக்கிற உணர்ச்சி உண்டாகவும் அவசரம் அவசரமாக அதைத் தின்னும் திருப்பணியில் ஈடுபட்டாள். அது அவரது சிரிப்பை அதிகப்படுத்தியது.

'இது ஐஸ்க்ரீம் இல்லை, செல்வா. கரைந்து விடாது. மெதுவாய் நிதானமாக சுவைத்துச் சாப்பிடலாமே!’ என்று சிரிப்போடு சிரிப்பாகச் சொற்களையும் அருளினார் ஆசிரியர்.

பிறகு 'அம்மா செளக்கியமா?' என்று விசாரித்தார்.

'அம்மா இறந்து இரண்டு வருஷங்களாச்சு, ஸார்!'

'அப்போ நீங்கள்?'

'எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. ஆனால்...நான் வந்து.... வந்து ஸார், என் கூட...'

அவள் எப்படி விளக்குவது என்று திண்டாடித் திணறிய வேளையிலே, 'செல்வா' என்று அழைத்தபடி ஒரு பரட்டைத் தலையர் வெளியே வந்தார். அவர் தலைமுடித் தோற்றமே அவர் ஒரு நாட்டிய நிபுணர் என்று சுட்டிக் காட்டியது.

பரமசிவத்துக்குத் தன் நண்பர் ஒருவர் குமாரி செல்வாவின் வாழ்க்கை மாற்றங்கள் பற்றிக் கூறியது அப்பொழுதுதான் நினைவின் மேல் பரப்பிற்கு வந்தது.

'ஓ' என்றார் ஆசிரியர். அந்த ஒரு உச்சரிப்பில் எவ்வளவோ