பக்கம்:ஒரே உரிமை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாருக்குப் பிரதிநிதி?

103



"அது என்ன எழவோ! இங்கே வந்து பாருங்கள்! அசல் தரித்திரங்களா ஏழெட்டு வந்து நிற்கிறதுகள்!" என்று சொல்லிக் கொண்டே 'அம்மா' உள்ளே சென்றாள்.

இன்னொரு சமயம் வந்து தம்மைப் பார்க்கும்படி அந்தப் பெரிய மனிதரிடம் சொல்லிவிட்டு, 'ஐயா' எழுந்து வெளியே வந்தார். 'அம்மா' சொன்னபடி அங்கே ஏழெட்டு 'அசல் தரித்திரங்கள்' தங்கள் தங்கள் மனைவி மக்களுடன் தலைவிரி கோலமாக வந்து நின்று கொண்டிருந்தன.

"என்னடா, இது? நீங்கள் யார்? என்ன சேதி?" என்று வெளியே வந்த 'ஐயா' அதிகாரத் தோரணையில் இரைந்து கேட்டார்.

"சாமி! நாங்க செம்படவனுங்க! சமுத்திரக் கரையோரமா ஆளுக்கொரு குடிசை போட்டுக்கிட்டு எங்க தொழிலைச் செஞ்சிக்கிட்டு இருந்தோம். அந்தக் குடிசைகள் இருக்கிறது சமுத்திரக் கரையின் அழகைக் கெடுக்குதாம். அதுக்காவ யாரோ அஞ்சாறு பேர் வந்து எங்க குடிசைகளை யெல்லாம் பிரிச்சுப் போட்டுட்டாங்க! நாங்க என்ன செய்வோம், சாமி? எங்களுக்கு இருக்க இடமில்லை......"

"ஏன், உங்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுத்தார்களோ, இல்லையோ!"

"கொடுக்காம என்ன, சாமி! ஆளுக்குப் பத்து ரூவாக் காசு கொடுத்தாங்க...!"

"பத்து ரூபாய்க் காசு கொடுக்காமல் உங்களுடைய பங்களாக்கள் ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சமா கொடுப்பார்கள்?"

"பத்து லட்சம் கேட்கலை, சாமி! 'அப்பாடி!' ன்னு படுக்கப் பத்தடி இடந்தான் கேட்கிறோம். அதுக்கு இந்தப் பத்து ரூவாயை வச்சிக்கிட்டு நாங்க என்ன செய்வது, சாமி?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/105&oldid=1149378" இலிருந்து மீள்விக்கப்பட்டது