பக்கம்:ஒரே உரிமை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

என்ன பாவம் செய்தேன்?


போனால் போகிறதென்று நான் எப்பொழுதாவது அவரிடம் ஒரு வார்த்தை பேசி விட்டால் போதும்; இந்த உலக சாம்ராஜ்யமே தம்முடைய கைக்குக் கிட்டிவிட்டது போல் அவர் ஒரே குதூகலத்தில் ஆழ்ந்து விடுவார்.

இந்த ரஸமான வாழ்க்கை நெடு நாள் நீடிக்கவில்லை. சிறிது நாளைக்கெல்லாம் காதலும் ஊடலும் குடிகொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் கோபமும் தாபமும் வந்து குடிகொண்டன. அன்று என்னை ஒரு முறையாவது நேருக்கு நேர் பார்த்து, ஒரு வார்த்தையாவது பேசிவிடவேண்டுமென்று அவர் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது போய், இன்று அவரை ஒரு முறையாவது நேருக்கு நேராகப் பார்த்து ஒரு வார்த்தையாவது கேட்டுவிட வேண்டுமென்று நான் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தேன். இந்த நிலையிலே நான் எதற்காகப் பெண்ணாய்ப் பிறந்தேனோ, அதற்காக மூன்று குழந்தைகளையும் பெற்று வைத்தேன்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்த அன்பு அத்தனையும் சேர்ந்து அந்தக் குழந்தைகளாக உருவெடுத்து வந்து விட்டனவோ என்னவோ, அதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கையில் துளிக்கூட அன்பே யில்லாமற் போய்விட்டது. நாளடைவில் அவர் என்னை எலியைப்போல் பாவிப்பதும், அவரை நான் பூனையைப்போல் பாவிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

இதனால் அந்த வீட்டில் குடித்தனம் செய்வதை 'என் தலைவிதி' என்று நான் நினைத்துக் கொண்டேன்; அந்தக் குடித்தனம் நடப்பதற்கு வேண்டிய வரும்படிக்கு வழி தேடுவதை அவர் 'தன் தலைவிதி' என்று நினைத்துக் கொண்டார்.

இந்த லட்சணத்தில் 'ஏன் பிறந்தோம்?' என்ற நிலையில் எங்கள் குழந்தைகள் வளர்ந்து வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/134&oldid=1149439" இலிருந்து மீள்விக்கப்பட்டது