பக்கம்:ஒரே உரிமை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

குழந்தையின் குதூகலம்

“எல்லா விசயமும் தெரிந்த நீயே இப்படிச் சொன்னா நான் என்ன பண்றது? செலவுக்குக் காசு தேடற விசயம் ஒரு பக்கம் இருக்கட்டும்; முதல்லே நேரம் இருக்கா? அதைச் சொல்லு!” என்றார் மாணிக்கம்பிள்ளை.

“எதற்குத்தான் உங்களுக்கு நேரம் இருக்கு?” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டுக் குப்புறப்படுத்துக் கொண்டாள் அவள். ஒரு நீண்ட பெருமூச்சு வரும்வரை அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மாணிக்கம் பிள்ளை படுத்துக் கொள்வதற்காகத் திண்ணைக்குச் சென்று விட்டார்.

அதற்கு அடுத்த நாள்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் விடிந்ததும் விடியாததுமாகத் தன் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டு வேலைகளில் இறங்கியிருந்தாள் மணியின் தாயார். மணி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.

“அம்மா! பூச்சாண்டி வந்து என்னைப் பிடிச்சுக் கிட்டானே!” என்று திடீரென்று அவன் வாசலிலிருந்தபடியே அலறியதைக் கேட்டதும். “ஐயோ! என்னடா, கண்ணு!” என்று கதறிக் கொண்டே தாயார் வாசலுக்கு ஓடோடியும் வந்தாள்.

முகத்தில் தாடியும் மீசையும் வளர்ந்து, பார்ப்பதற்கு விகாரமாயிருந்த ஒரு தரித்திர உருவம் மணியை ஆசையுடன் கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்டிருந்தது.

மணியைப்போல் அவன் தாயாரும் அந்த உருவத்தைக் கண்டு பயந்துவிடவில்லை; முக மலர்ச்சியுடன், “அவர் தாண்டா, உன் அப்பா!” என்றாள்.

“நிஜமாவா, அம்மா! என் அப்பாவா, அம்மா!” என்றான் குழந்தை ஆச்சரியத்துடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/58&oldid=1148970" இலிருந்து மீள்விக்கப்பட்டது