பக்கம்:ஒரே உரிமை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனக் குறை

67

“அட, சனியனே! நீ மட்டுமா போகப் போகிறாய்? உன்னுடன் கொண்டுவந்த வெள்ளிப் பாத்திரங்கள், மரச் சாமான்கள், ரேடியோ, மோட்டார் சைக்கிள், வீடுவாசல் எல்லாம் என்ன கதியை அடைவது? அவற்றையும் கையோடு எடுத்துக் கொண்டு போ!” என்று ஸ்ரீமதி ஹரியை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அவளைப் பரிகாசம் செய்தான் நாராயணமூர்த்தி.

“பிறத்தியார் சொத்துக்கு ஏன் இப்படி வாயைப் பிளக்கிறீர்களோ, தெரியவில்லையே! உங்களுடைய கையால் ஒன்றுமே ஆகாதா? என்னைப் போல் பிறந்தகத்தி விருந்து ஒன்றுமே யில்லாமல் வந்த எத்தனையோ பெண்கள் இன்று புக்ககத்தில் என்னைவிட மேலாக வாழவில்லையா? கைபிடித்த கணவனின் மூலமாகவே எல்லா விதமான சுக போகங்களையும் அடையவில்லையா? ஹரிகிருஷ்ணனுக்கு அவருடைய வேட்டகத்தாரிடமிருந்து எல்லாம் கிடைக்கிறதென்று நீங்கள் ஆத்திரப்படுகிறீர்களே, அடுத்த வீட்டு அமிர்தத்துக்கு அவள் அகமுடையான் வீட்டிலிருந்தே எல்லாம் கிடைத்து வருகிறதே, அதற்காக நானும் வேண்டுமானால் உங்களைப்போல் ஆத்திரப்படக் கூடாதா? ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று எந்த நேரமும் உங்களை நச்சரிக்கக் கூடாதா? வேட்டகத்தாரிடமிருந்து ஒன்றும் கிடைக்கவில்லையே என்று உங்களுக்கு இருக்கும் மனக் குறைபோல, புக்கத்தாரிடமிருந்து ஒன்றும் கிடைக்கவில்லையே என்ற மனக் குறை எனக்கும் இருக்காதா?” என்று அத்தனை நாளும் தன் அகத்தில் அடக்கி வைத்துக் கொண்டிருந்த ஆத்திரத்தையெல்லாம் அள்ளி அள்ளிக் கொட்டிக் கொண்டே போனாள் குமுதம்.

அவள் வாயைப் பார்த்தபடியே தன் வாயைப் பிளந்து கொண்டு நின்றான் நாராயணமூர்த்தி.

அத்தனை நாளும் அவனுடைய உள்ளத்தில் உதயமாகாத ஒரு உண்மை அன்று உதயமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/69&oldid=1148998" இலிருந்து மீள்விக்கப்பட்டது