பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

இருந்து அசரீரி ஒன்று எழுந்தது. அந்த ஆணையின்படியே, அந்நாட்டை ஆண்ட அரசனான 'இபிடஸ்' என்பவன் ஒலிம்பிக் பந்தயத்தைத் துவக்கினான்.

இப்படி ஒரு கதையை, கிரேக்கப் புராணம் கூறுகிறது. கதை என்றால் வளரும் அல்லவா! இன்னொரு புராணக் கதையும் ஒலிம்பிக் பிறப்பிற்கு உண்டு.

“ஹிராகிலிஸ் என்ற அரசனுக்கும், 'அகஸ்' எனும் அவனது பகைவனுக்கும். மல்யுத்தப் போட்டி ஒன்று நடந்தது. அந்தப் போட்டியில், அகஸை' ஹிராகிலிஸ் வென்றதோடல்லாமல், கொன்றும் விட்டான். அந்நிகழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்வதற்காக, தனது தந்தை 'சீயஸ்' என்பவருக்கு 'ஒலிம்பியா' என்ற இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டியான். அந்தக் கோயிலின் முன்னே விளையாட்டுப் பந்தயங்கள் நடக்க விளையாட்டு அரங்கம் ஒன்றைத் தானே அளந்து கட்டி முடித்தான்.

மேலே கூறிய புராணக் கதையைவிட, பொருத்தமான அதே சமயத்தில், சுவைமிக்க இன்னொரு நிகழ்ச்சியும் உண்டு. அதையும் கீழே காண்போம்.

கிமு 9.ம் நூற்றாண்டு. கிரேக்க நாட்டிலே ஓடும் கீர்த்தி மிக்க நதியான ஆல்பியஸ் கரையில் அமைந்த, அழகான பகுதியான ஒலிம்பியாவில் உள்ள 'பிசா' (Pisa) எனும் நாட்டை, 'ஓனாமஸ்' (Oenomaus) என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு அழகும் அறிவும் நிறைந்க பெண் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் ஹிப்போடோமியா. அவளைத் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் விரும்பினர். அடுத்தடுத்து முயன்றனர். மங்கையோடு மகுடமும் மன்னர் பதவியும் அல்லவா சேர்ந்து வருகிறது!