பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மெய்க்காப்பாளன்

சோழமன்னர் விஜயாலயன் திடீரென்று அன்றைக்கு மந்திராலோசனை சபையைக் கூட்டினார். அதற்குக் காரணம் இருந்தது. அரண்மனையில் வேலை செய்துவந்த மெய்க்காப்பாளர் பட்டியலில் வளவன் என்ற மெய்க்காப்பாளனுக்கு முதுமை வந்துவிட்டதால், அந்தப் பதவிக்கு வேறு தேர்ந்த ஒருவனை நியமனம் செய்யவே அந்தரங்கக் கூட்டம் கூடியது.

ஒரு நாழிகைப் பொழுதுக்குப் பிறகு மன்னர் தன் அபிப்பிராயத்தை வெளியிட்டார்.

சோழநாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் செய்தி பறையறிவிக்கப்பட வேண்டுமென்றும், மெய்க் காப்பாளனைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் பரீட்சையில் யார் வெற்றி பெறுகிறானோ அவனுக்கே மெய்க்காப்பாளன் பதவி கிடைக்குமென்றும் விவரித்தார் அரசர்.

“அதுவே சரி” என்றது மந்திராலோசனை மண்டபம்!