124
ஓங்குக உலகம்
பெருகும் என்பதும் உண்மை. அன்று, இன்றைக்கு நாம் புதிது புதிதாகக் கண்டதாக எண்ணும் பல, மிகச் சாதாரணமாக எளிமை உடையனவாக அமையும். அன்றும் அதற்கடுத்த ஆயிரமாயிர ஆண்டுகளிலும் விஞ்ஞானிகள் தம் ஒவ்வொரு ஆய்வின் முடிவிலேயேயும், ‘அறிதோறறியாமை கண்டற்றால்’ என்ற வள்ளுவர் வாக்கையும் ‘பின்னும் புதிதாய்’ என்ற மணிவாசகர் வாக்கையும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள். எனவே பேரண்டம் பற்றிய ஆய்வையோ அதன் ஊற்றான பஞ்சபூத நிலைக்களனையோ அவற்றின் முடிவிலாற்றலுடைமையையோ யாரும் முற்றக் கண்டுவிட்டோம் என்று என்றும் கூறமுடியாது. எனவே எதையும் கண்டு விட்டதாக முடிவுகட்டி விடாதீர்கள் என்று இன்றைய விஞ்ஞானிகளை நான் தலை தாழ்ந்து கேட்டுக்கொள்ளுகிறேன்.
இவ்வாறு கூறுவதால் இந்த அறிவியல் ஆய்வுகளெல்லாம் வேண்டாமென்று நான் கூறுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்த ஆய்வுகள் நன்கு வளர வேண்டும். ஆயிரமாயிரமாக எல்லையற்று வளர வேண்டும்-ஆனால் அவை அனைத்தும் ஆக்க நெறிக்கே பயன்பட வேண்டும். அவ்வாறு ஆய்வு பெருகிப் பெருகி வளர வளரத்தான் வள்ளுவரும் வாசகரும் சொன்ன மொழிகள் உண்மை என்பதை மேலும் மேலும் உலகம் உணர்ந்துகொள்ளும். உலக உயிர்களும் இவற்றின் ஆக்கத்தாலும் உணர்வாலும் புற அழகும் அக அழகும் பெற்று, வாழ்வில் பெறக் கடவதாகிய எல்லாச் செல்வங்களும் பெற்று இம்மை மறுமை இரண்டிடத்தும் பெறக் கடவதாகிய செம்மை வாழ்வைப் பெற்று வாழமுடியும். எனவே ஆய்வு பெருகவேண்டும். அதன் வழி ஆக்கமும்