பக்கம்:ஓங்குக உலகம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

ஓங்குக உலகம்


ஒவ்வொரு பொருள் பற்றியும் திட்டவட்டமாக அறிவிக்க நினைக்கிறார். அறிவிக்கவும் செய்கிறார். எனினும் இரு பொருள்களின் திறனும் செம்மையும் உயர்வும் பயனும் விளக்க நேரிடும்போது அவர் நடுநிலை பிறழாது உள்ளதை எப்படியும் கூறிவிடுகின்றார். ஆழ்ந்து நோக்கின் அவரது தெளிந்த புலமை வழி உருவாகும் உண்மையின் செம்மை உலகுக்கு நன்கு புலனாகும். ஒவ்வொரு அதிகாரத்திலும் எடுத்துக்கொண்ட பொருளின் செம்மையினையோ அன்றிக் கொடுமையினையோ அதன் எல்லையின் கோடியிலே நின்று காட்டும் வள்ளுவர், அப்பொருள்களை இணைத்துக்காட்டும்போது அவற்றுள் ஒன்றன் மேலாய்ப் பொருந்திய உயர்வினைக் காட்டத் தவறுவதில்லை. எடுத்துக்காட்டாக ஒன்றினைக் காண்போம்.

அறங்களைப் பல வகையில் வகுத்துக் காட்டும் வள்ளுவர் பொய்யாப்பெரு நெறியினையும் அறத்திற்குள்ளேயே அடக்குவர். உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவார் உயர்வைப் பலபடப் பாராட்டுகின்றார் வள்ளுவர். ஒருவன் பொய் சொல்லாதிருப்பானாயின், அவன் வேறு எந்த அறமும் செய்யா நிலையிலேயே உயர்வு பெறுவான் என வற்புறுத்திக் காட்டுவார் அவர்.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று”

என்ற குறளில், அதன் ஏற்றத்தை உச்சியில் வைத்துப் போற்றுகின்றார். பரிமேலழகரும் பிறரும் இக் குறளுக்குப் பலவகையில் உரைகள் கூறுவர். இத்தகைய உயரிய நிலையில் காட்டிய பொய்யாமையே உலக அறங்களிலெல்லாம் மேலானது என்றுதான் இந்த அதிகாரத்தோடு நிற்பார் நினைப்பர். ஆயினும் பிற அதிகாரங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/187&oldid=1128031" இலிருந்து மீள்விக்கப்பட்டது