பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

பணம் பெற்றவர்கள் மிருக வெறியுடன் பலப்பல கன்னியரை சகிக்க விரும்பி விபசாரத் திறப்பு விழா செய்து அதை வளரவிடுவது தரித்திரத்தினாலா? சதை வெறி பற்றியலையும் கணவனால் இன்பம் பெறாத இளம் மனைவி சதைப்பசி தணிக்க வீட்டு வேலைக்காரர்களைக் காதலர்களாக்குகிற காம நாடகம் பணக்காரவீடுகளிலே நடைபெறுவது எதன் பிசகு? உணர்ச்சிகள் ஆட்டிவைக்கிற விளையாட்டு அல்லவா!

உணர்ச்சியின் கைப்பாவையானாள் சிவகாமி. செல்வம் சுகவாழ்வு எல்லாவற்றுடன் - மனதுக்குப் பிடிக்காத கணவனிருந்தாலும்-மனதுக்குகந்த ஆசை நாயகன். வாழ்க்கை சொர்க்க போகம்தான்.

ஆனால், உண்மை வெளியாகாது போகுமா? ஒரு நாள் பட்டப் பகலிலே மத்தியானம் மூன்று மணிக்கு கட்டிலேறி சிவகாமியும் காத்தலிங்கமும் நடத்திக் கொண்டிருந்த காமநாடகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டார் பண்ணையார்! அவர் அயலூரிலிருந்து இரவு பத்துமணி ரயிலுக்குத் தான் வருவார் என நம்பினார்கள் அவர்கள். ஆனால் பாழாய்ப் போகிற இரண்டு மணி வண்டி அவரைக் கொண்டு வந்து தள்ளிவிட்டதே!

பலன் என்ன?

அவரிடம் பணம் இருந்தது. பணமில்லாத காந்தலிங்கம் அவர் வீட்டிலே திருடிவிட்டான் என்று குற்றம் சுமத்தப்பட்டு நாலு வருஷக் கடுங்காவல் தண்டனையில் ஜெயிலுக்குப் போனான். அவனால் திருடப்பட்டது பணமல்ல. பணமும் நகையும் என்று தான் சொன்னார் பண்ணையார். ஆனால் திருடப்பட்டது பண்ணையார் மனைவியின் ‘கற்பு’