பக்கம்:ஓ மனிதா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கழுதை கேட்கிறது

17

நாய்க்குப் பதிலாகத் தானே எஜமானைத் தூக்கத்திலிருந்து எழுப்பத் துணிந்து ‘அக்கக்கே, அக்கக்கே’ என்று குரல் கொடுக்கிறது. அவ்வளவுதான்; எஜமானுக்கு வந்துவிடுகிறது கோபம். துள்ளி எழுகிறான்; மூலையில் சாத்தி வைத்திருந்த கழியை எடுக்கிறான்; எதிர்த்தாற் போலிருந்த கழுதையை ‘அடியோ அடி’ என்று அடித்து நொறுக்கிவிடுகிறான்.

இந்த விஷயத்தில் கரடியும் மனிதனும் ஒன்று. தான் தூங்கும்போது யார் தன்னை வேட்டையாட முயன்றாலும் விழித்தெழுந்த கரடி, ‘யார் அந்த வேட்டையாளன்?’ என்பதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்படாதாம்; அந்தச் சமயம் எந்தப் பிராணி தன் கண்ணில் படுகிறதோ, அந்தப் பிராணியைப் ‘பிறாண்டு, பிறாண்டு’ என்று பிறாண்டி எடுத்து விடுமாம்.

இத்தகைய ‘சிறப்பான குணத்’தைத் தானும் கொண்டிருக்கும் பெருமையில் பூரித்துப் போயிருக்கும் மனிதன் மேற்படி கதையின் மூலம் இந்தப் பரந்த உலகத்துக்குப் போதிக்கும் மிகப் பெரிய நீதி என்ன? யார் எப்படிப் போனாலும் அதைப் பற்றி நீ கவலைப் படாதே, “அவரவர்கள் வேலையை அவரவர்கள் செய்யட்டும் என்று நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடு!” என்பதே!

இதைச் சொல்லும்போது இந்த நீதிக்கு விரோத மாக அண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/18&oldid=1370257" இலிருந்து மீள்விக்கப்பட்டது