பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஔவையார் தனிப்பாடல்கள்



"பிசிராந்தை வருவாரோ?” என்றார் ஒருவர்.

"தவறாமல் வருவார். என் நல்ல காலத்தில் வராதிருந்தாலும், என்னுடைய அல்லற் காலத்தில் வராதிருப்பார் அல்லர்” என்று உறுதியுடன் சொன்னான் சோழன்.

சொன்னபடியே அவரும் வந்தார். அவருடைய உள்ளம் சோழனுக்குத் துயரஞ்சூழ்தலை அவருக்கு உணர்த்த, அவர் தாமே விரைந்து நடந்து, சோணாட்டை அடைந்தார்.

"பிசிராந்தையார் வந்தார்” என்றதும், பலரும் வியப்புடன் மெய்மறந்து அவரைப் போற்றினர். அவர் சோழனை உவகையோடு கண்டார். அவனருகே தாமும் அமர்ந்தார். இருவரது உயிரும் ஒரே வேளையிற் பிரிந்தது. சாவின் செயல் அவர்களை ஒன்றுபடுத்தியது.

இப்படியே, காதல் கொண்ட தலைவன் தலைவியராகிய இருவரும் தமக்குள் பிரிக்கவியலாத நட்புப் பூண்டு ஒழுகுவது பண்டைத் தமிழகத்தில் இயல்பாயிருந்தது.

இளைஞன் ஒருவனுக்கும் கன்னி ஒருத்திக்கும் இடையே காதல் முகிழ்கலாயிற்று. அது மலர மலர, அவர்களது நெருக்கமும் உறுதியாகத் தொடங்கியது. பெற்றவரை அறியாதே அவர்களின் களவுறவும் நிகழத் தொடங்கிற்று.

கன்னியின் செவிலித்தாய் தன் மகளது மேனியில் தோன்றிய புதுப் பொலிவுகளைக் கண்டாள்! அவள்மனம் சிதறியது. தெய்வக் குற்றமோ என ஐயுற்றாள். வேலனை அழைத்து, வெறியாட்டு அயர்வதற்கும் ஏற்பாடு செய்தாள்.

வாயாடிப் பெண்கள் சிலருக்குக் கன்னியின் களவு உறவைப் பற்றிய செய்திகள் காற்றுவாக்கிற் கிடைத்து விட்டன. அவர்களின் வாய்மடை திறந்தது; வார்த்தைகள் வரைகடந்து வெளிப்பட்டன.

“ஒன்றுமறியாத கன்னியைப் பாருங்கள்! இவள் உறவுக்குச் சோலை மரங்கள் சான்று சொல்லுமே”

"இவள் காதலன் எவனோ? இவளை மயக்கிய அவனது எழில்தான் எத்துணைப் பேரழகோ?”

இப்படிப் பேச்சுக்கள் மலிந்தன. இதனால், அவர்களுடைய களவுச் சந்திப்புக்கள் குறைந்தன. பகற்போதில் அவளை தனியாகப் பார்ப்பதே அவனுக்கு அரிதாயிற்று. அவள் குளிக்கச் சென்றாலும், மலர் கொய்யப் போனாலும், ஆடற்கு ஏகினாலும், அவளைத் தோழியர் சூழ்ந்து மொய்த்தபடி கண்காணிக்கத் தொடங்கினர்.

இரவு வேளையிற் சந்திக்கும் வாய்ப்புஞ் சில நாட்களே கை கூடிற்று. அதன்பின் காவல் கடுமையாயிற்று.