பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

145



அவளை மறக்க முடியாமல் அவன் மெலிந்தான்.

அவனை அடைய இயலாமல் அவள் தவித்தாள்.

அவன், தன் பெற்றோரிடம் நிகழ்ந்ததைச் சொன்னான். அவர்கள் அவனுடைய எண்ணத்தை மறுக்கவில்லை. சான்றோர் சிலரைக் கன்னியின் வீட்டிற்கு, உரிய பரிசுப் பொருள்களுடன் அனுப்பி வைத்தனர்.

அவர்கள் சென்று மணம் பேசினர். கன்னியின் பெற்றோர்க்கு அவர்களின் களவுறவு தெரியாது. அவர்கள் அவளைத் தம் உறவில் ஓரிளைஞனுக்கு மணமுடிக்கக் கருதியிருந்தனர். அதனால், சான்றோரின் வேண்டுதலை ஏற்காது மறுத்தனர்.

தலைவியின் உள்ளம் படாதபாடுபட்டது. தான் காதலித்தவனை மறந்து, மற்றொருவனுடன் வாழ்வதென்பதை, அவளால் நினைக்கவும் முடியவில்லை. அவள் புழுவாகத் துடித்தாள். அவள் கண்கள் கண்ணிர்க் குளமாயின.

"ஏனடீ! இந்தப் பிடிவாதம்? எவனையோ கண்டாளாம்? காதல் பிறந்ததாம்? அவனையே மணக்க வேண்டுமாம்? இது நடக்கக் கூடியதா? நீ பிறந்தபோதே உன் கணவன் என்று நாங்கள் உறுதி செய்தவன், உனக்காகக் காத்திருக்கின்றான். அவனை விட்டு, இன்னொருவனை எப்படியடி நீ நினைத்தாய்?"

இப்படிப்பட்ட கண்டனக் கணைகள் பல அவளைத் தாக்கின. பிரிவுத் துயரம் ஒருபுறமும், இல்லத்தாரின் காவற் கடுமையும், கடுஞ்சொற் கொடுமையும் மற்றொரு புறமுமாக அவளைத் தாக்கின. அவள் கண்கள் நீரூற்றுக்கள் ஆயின. அவள் பூச்சும் மறந்தாள்; புனைவும் துறந்தாள்! ஊணும் மறந்தாள், உறக்கமும் இழந்தாள்!

அவளுடைய ஆருயிர்த் தோழி ஒருத்திக்கு இந்த அவலமான போக்கை நினைக்க நினைக்கப் பெரிதும் வேதனையாக இருந்தது. அதனை எப்படியும் போக்கி விடுதற்கு அவள் திட்டமிடலானாள்.

கன்னியின் காதலனைக் கண்டு பேசினாள். “எப்படியாவது வீட்டிலிருந்து அவளைக் கடத்திக் கொண்டு வந்து விடுகின்றேன். உன்னுடன் அவளை அழைத்துப்போய் விடு. உன்னுடைய ஊருக்குச் சென்று இருவரும் மணந்து கொள்ளுங்கள்” என்றாள்.

அவனும் அதற்கு இசைந்தான். அவளுக்காகக் குறித்த இடத்திற்குச் சென்று காத்துக் கிடக்கலானான்.

ஒரு நாள் இரவின் கடைசிச் சாம வேளையில், அவனை யாரோ எழுப்ப, அவன் திடுக்கிட்டு விழித்தான். உறக்கத்தின்