பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

9


முடியுமா? குளவிகள் கட்டும் வலிய அரக்குக் கூட்டினைப்போல எவராலாவது செய்வதற்கு இயலுமா?

பழமையான கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது! தேனீக்கள் கட்டும் கூடுகளிலேதான் எத்தனை அமைப்பு நுட்பம் விளங்குகிறது!

சிலந்தியின் வலையைப்போல எவராலாவது ஒரு வலை பின்னிவிட முடியுமோ?

இவற்றை யாராலுமே செய்யவியலாதுதான். அதனால், அவற்றையே தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவை என்று பாராட்டலாமோ? அதற்கு அதனதன் கூட்டினைக் கட்டுதல் எளிது; அஃதன்றி, வேறு எதுவுமே அவற்றுக்குத் தெரியாது.

அதனைப்போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாயிருக்கும். கம்பர் விருத்தப் பாவில் வல்லவரானால், வெண்பாவில் புகழேந்தியார் இருக்கிறார். உலாவில் நம் ஒட்டக்கூத்தர் வல்லவர். இப்படி ஒவ்வொரு துறையிலும் வல்லவர் உளர். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும்! அதுதான் சிறப்பு.

"அஃதல்லாமல், ஒரு துறையிற் சிறந்தவரையே எல்லாம் அறிந்தவராகக்கொண்டு, அளவுக்கு மீறிப் பாராட்டுதல் கூடாது. அவரும் அனைவரினும் பெரியவர் என்று செருக்குறுதலும் தவறு. ஒவ்வொருவருக்கும் பிறராற் செய்யவியலாத ஒன்றை எளிதாகச் செய்வதற்கு இயலும். இதனை உணர்ந்து அடங்கியிருப்பதுதான் புலமை உடையவரின் பண்பு” என்றனர்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

"தூக்கணாங் குருவியின் கூடும், உறுதியான அரக்கும், பழமை கொண்ட கரையான் புற்றும், தேன்கூடும், சிலந்தியின் வலையும் நம்மில் யாவருக்கும் செய்வதற்கு அரிதானவையாகும். அதனால் யாம் பெரிதும் வல்லமை உடையோம் என்று எவரும் தற்பெருமை பேசுதல் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதானது என்று அறிவீர்களாக" என்பது பொருள்.

ஒளவையாரின் பாடற்கருத்தினை அந்த அவையாலும், கம்பர், சோழன் ஆகியோராலும் மறுக்க முடியவில்லை. எப்படியோ தன்பால் வளர்ந்துவிட்ட கம்பர் மீதுள்ள அளவற்ற அன்புதான், அவரை அளவுக்குமீறிப் போற்றுமாறு செய்தது என்பதனைச்