பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஔவையார் தனிப்பாடல்கள்


சோழனும் உணர்ந்தான். அதனால் புலவர்கள் பலர் புண்பட்டிருப்பர் என்பதனையும், தன்மீதுள்ள அச்சத்தாலேயே அதுவரை ஏதும் கூறாதிருந்திருக்கவேண்டும் என்பதையும், அதன்பின் அவன் தெரிந்து கொண்டான்.

6. பழக்கமும் குணமும்!

நிலைமையைச் சோழன் உணர்ந்தான். எனினும், புண்பட்ட கம்பரின் உள்ளத்தைச் சிறிதேனும் மாற்றுதற்கும் விரும்பினான். அதனால், மேலும் சிறிது அவரைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.

'கம்பநாடரின் இராமாயணப் பெருமையை நம்மால் மறக்கவே முடியவில்லை.கம்பர் பிறவிக்கவிஞர் என்ற பெருமைக்கு உரியவர். ஒளவையார் சொல்வதில் உண்மை இருந்தாலும், அவர் கம்பரின்மீது வேண்டுமென்றே குறை காண்கின்றனர். அந்தக் குறை கம்பர்பால் இல்லை என்பதனை நாமும் அறிவோம்; நம் நாடும் அறியும்' என்றான்.

'கம்பரைப் பிறவிக் கவிஞர்' என்று சொன்னது, பிறரை அவரினும் தாழ்ந்தவர் என்று கூறியதுபோல எதிரொலித்தது. அதனால் அந்த நினைவை மாற்றவும், சோழனுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவும் ஒளவையார் கருதினார்.

அதனால், உலகியல் உண்மைகளாக விளங்கும் சில செய்திகளை எடுத்து உரைப்பவரும் ஆயினார்.

சிறந்த சித்திரக்காரன் ஒருவனைப் போற்றுகின்றோம். அவனுடைய ஆற்றல் அவனுடைய தளராத கைப்பயிற்சியினாலே வந்தது. அந்தப் பயிற்சிக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தால் மேலும் பலர் சிறந்த சித்திரக்காரர்களாக ஆகியிருப்பர்.

செந்தமிழ் வல்லார் சிலரைக் காண்கிறோம். முறையான தமிழ்ப்பயிற்சி அளித்தால், நாட்டிலே செந்தமிழ் வல்லார்கள் திரளானபேர் உருவாகி விடுவார்கள்.

சிறந்த கல்வி ஞானம் உள்ளவர்கள் என்கின்றோம். அந்த ஞானம் மனத்தை ஒன்றின்பால் உறுதிபெற நிறுத்திப் பழகிய பழக்கத்தால் அமைந்ததாகும். அந்த மனப்பழக்கம் பலருக்கும் ஏற்பட வழிசெய்தால், அவர்களிலும் மிகப்பலர் ஏற்படுவர்.

சிலருடைய நடைகள் நமக்குச் சிறப்பாகத் தோன்றும். அது அவர்கள் நாள்தோறும் நடந்து வருகிற ஒழுகலாற்றின் பழக்கத்தால் அமைந்தனவாகும்.