பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஔவையார் தனிப்பாடல்கள்



எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்னால், அச்செயல் இடையூறின்றி முடிவதன் பொருட்டாக விக்கினங்களைப் போக்கிக் காக்கின்ற விநாயக் கடவுளைத் தவறாது வேண்டி வழிபட வேண்டும் என்பார்கள். அந்த விநாயகரோ ஒளவையாரின் வழிபடு தெய்வமாகவும் இருந்தார். தாம் அன்புகொண்ட அங்கவை சங்கவை ஆகியோருக்கு மணமுடிக்க உறுதி செய்ததும், அவர்களின் திருமண ஒலையை எழுதுமாறு அவ் விநாயகரையே வேண்டுகிறார் அவர்.

விநாயகர், முன்னர் வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பாரதத்தை எழுதினார். அப்போது, தம் எழுத்தாணியாகத் தம்முடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து வைத்துக்கொண்டு எழுதினார். அதனால், அவர் ஒற்றைக் கொம்பனாகவும் விளங்குபவராவர்.

“அன்று பாரதம் எழுதினாய். இன்று இந்தப் பெண்களின் துயரைத் தீர்த்து நல்ல நிலையிலே மணமுடித்துக் காண்பதற்கு விரும்பும் எனக்கும் நின் உதவியைத் தருக பெருமானே! நீயே வந்து இவர்களின் திருமண ஓலையினை எழுதித் தருக" என்று துதித்து வேண்டுகின்றனர் ஒளவையார்.

ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்க்
கரியரிவைக் கங்காளன் காளாய் - பரிவுடனே
கண்ணால வோலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

“ஒற்றைக் கொம்பனே! இரு செவிகளையும், மும்மதங்களையும், தொங்குகின்ற வாயினையும் உடையவனே! யானைத் தோலைப் போர்த்தும், எலும்பு மாலைகளை அணிந்தும் விளங்கும் சிவபிரானின் திருக்குமாரனே! இப் பெண்களிடத்து இரக்கம் உடையவனாக இவர்களின் கல்யாண ஓலையினை எழுதுவதற்கு விரைந்து வருவாயாக! நீ வராதிருந்தால், நின் ஆற்றல்கள் அனைத்தும் நீங்கிப்போக நின்னைச் சபித்து விடுவேன் நான்” என்பது பொருள்.

விநாயகன் அடியவர்க்கு எளியவன். ஒளவையார் அழைத்தாலே போதுமானது. அவன் அவர்க்கு அருள்புரிந்து நிற்பான். எனினும், அவருடைய ஆசையின் தீவிரம் அவருடைய செய்யுளில் எதிரொலிக்கின்றது. நிலை தளர்ந்தாரிடையே உலகினர் காட்டும் அலட்சிய மனோபாவத்தைத் தெளிவாக உணர்ந்தவர் ஒளவையார். அதே மனோபாவம் விநாயகனுக்கும் இருந்துவிடக் கூடாதே என்றுதான், 'வாராயேல் சபிப்பேன்' என்கின்றனரோ!