பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஔவையார் தனிப்பாடல்கள்


அவர் வேண்டியபடியே பனந்துண்டம் நிமிர்ந்து நின்று மரமாகிப் பழங்களைத் தந்தது. மூவேந்தரும் கண்டு மெய்மறந்து நின்றனர். அவர்கள் உள்ளம் ஒளவையாரின் தெய்வீக ஆற்றலை எண்ணி வியந்து கொண்டிருந்தது.

29. பொன் ஆடு!

ணப்பெண்களுக்கு மூவேந்தரும் மற்றும் பலரும் வாழ்த்துரை கூறிக் கணக்கற்ற பரிசுகளை நல்கினர். ஒளவையார் தம்முடைய நினைவாக ஒரு பால் தரும் ஆட்டினைத் தருதற்கு விரும்பினார்.

பொன்னும் பொருளும் அளிப்பதினும், ஒரு பாலாடு அளிப்பதில் ஒரு தத்துவம் அமைந்திருந்தது. 'குட்டியுடன் விளங்கும் ஆட்டினைத் தருவது’அவர்களும் பெற்றுப் பெருகி வாழ வேண்டும் என வாழ்த்துவதாக இருக்கும்.

அவரிடம் ஆடு ஏது! அவர், அருகே இருந்த சேரமானிடம் “சேரலனே! என் பரிசாக இந்தப் பெண்களுக்கு ஒரு கரப்பாடு தரலாமென்று கருதுகின்றேன். நின்னால் கொடுத்து உதவ முடியுமோ?” என்றார்.

சேரனும் இசைந்தான். தன் ஏவலர்களுக்குக் குறிப்பாக உணர்த்தினான். அவர்களும் விரைந்து சென்றனர்.

சென்றவர்கள் மீண்டு வருவதற்கு நெடுநேரம் பிடித்தது. ஒளவையார் சேரனை வினவினார். 'அவனோ, கொண்டு வருவார்கள்' என்று சொல்லிப் புன்னகை பூத்தான். ஏவலர்கள் கொண்டு வந்து வைத்ததும், ஒளவையார் வியப்பால் மெய் மறந்தார். பொன்னாற் செய்த ஆடும் குட்டியும் அங்கே இருந்தன. சேரனின் கொடைச்சிறப்பு அவரைப் பெரிதும் களிப்புக் கொள்ளச் செய்தது.

சிரப்பான் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்பாடு யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவார் தம்கொடையின் சீர்.

என்று அச் சிறந்த செயலைப் பிறரும் அறியுமாறு பாடினார் ஒளவையார்.

“தலைமேலாக மணிகள் இழைத்த கிரீடத்தைச் சூட்டியிருக்கும் சேரமானிடத்தே பால்தரும் ஆடு ஒன்றினை யான் கேட்டேன். அவனோ, பொன்னாற் செய்த ஆடொன்றைத் தந்தான். இரப்பவர்கள் என்ன கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தம் கொடையின் சிறப்பு எங்ஙனமாக