பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஔவையார் தனிப்பாடல்கள்


செய்யுளாகப் பாடி, அதனை அவன் வீட்டுச் சுவரிலேயே எழுதிவைத்தும் சென்றார்.

அந்தச் செய்யுள் ஊர் முழுதும் பரவலாயிற்று. அவனுடைய உண்மையான தன்மையினை அனைவரும் உணர்ந்து பழித்தனர். அவன் புலவர்க்குச் செய்த கேடும் அன்றுடன் நின்றது. அந்தச் செய்யுள் இது :

கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
எருதாய் முழப்புடவை யாகித் திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை.

"கோரைக்காலிலே இருக்கும் ஆழ்வான் என்பவனின் ஈகை யானையாகி, குதிரையாகி, கருநிற எருமையாகி, எருதாகி, ஒரு முழப் புடவையாகி, முடிவில் அந்தப் புடவை திரிதிரியாய்க் கிழிந்து கந்தலாவதுபோல, எதுவும் இல்லாததாயிற்று. என் கால்கள் தேரைக்காலின் தன்மையடைந்தன. மிகவும் தேய்ந்து நடந்து நடந்து ஓய்ந்தும் போயின.(அதுதான் நான் பெற்றது)" என்பது பொருள்.

இந்நாளிலும் இப்படித் தாராளமாக வாக்களித்துக் கொண்டே, ஏதும் செய்யாமல் இருப்பவர் பலர். ஆனால் அவர்களைப் பாடிப் பழிப்பதற்கு ஒளவையார்தான் இல்லை.

36. சேடன் வாழ்வு!

கோரைக்கால் ஆழ்வானைப் போலவே, சேடன் என்னும் பெயரோடு ஒருவன் இருந்தான். இவனும் ஏராளமாகச் செல்வத்தைச் சேமித்து வைத்திருந்தான். இவனும் எவருக்கும் எதுவும் வழங்கி அறியாதவன்.

ஒளவையார் அவனை ஒரு சமயம் சென்று கண்டார். அவனுடைய கருமித்தனம் அவரை மிகவும் வாட்டியது. ஆனால், ஒரு வகையில் இவன் நல்லவன். ஆழ்வானைப் போல இவன் எவரையும் தருவதாகச் சொல்லி வரவழைத்து ஏய்த்ததில்லை. 'இல்லை' என்ற சொல்லை மிகவும் அழுத்தமாகவே சொல்லி விடுவான்.

பாவாணராக வருவார்க்கு அவன் யாதும் வழங்கியதில்லை. அவராற் பாடப்பெற்ற பெருமையும் அவனுக்குக் கிடையாது. அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை.

பலரும் மெச்சும்படி ஆர்ப்பாட்டமாக வாழ்வதும் அவனுக்குப் பிடிக்காது. அதனால் அவன் மிகவும் சாதாரணமாகவே ஓர் ஏழைபோலவே வாழ்ந்து வந்தான்.