பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

59



புகழேந்தியும் நற்றமிழில் வல்லவர். அரசிக்குக் குருவாக இருந்து அவருடன் சோழ நாட்டிற்கு வந்தவர். கூத்தரின் சொல்லம்புகளை எல்லாம் தம் பொறுமையினால் தாங்கிக் கொண்டு வென்று வந்தார்.

அன்றும், விவாதம் எங்கோ சென்று, இறுதியில் கூத்தரும் புகழேந்தியாரும் ஒருவரோடு ஒருவர் கடுஞ்சொல் நிகழ்த்தும் அளவிலே வளர்ந்து கொண்டிருந்தது. மற்ற புலவர்கள் அது என்றும் காணும் காட்சியாதலால், எதுவும் பேசாது அந்தப் புலமைச்சண்டையிலே எழுகின்ற தமிழ் வெள்ளத்தைச்சுவைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒளவையாரால் அந்தப் போக்கைப் பொறுத்துக் கொண்டிருக்க இயலவில்லை.

"கூத்தரே, இத்துணைப் பெரிதுபடப் பேசும் நீர் மூன்று பிறை வருமாறு ஒரு செய்யுள் இயற்றும் கேட்போம்” என்றனர்.

கூத்தர் புன்சிரிப்புடன், 'வெள்ளத் தடங்காச் சினவாளை’ என்ற செய்யுளைச் சொன்னார். அதில் இரண்டு மதியே வர, ஒளவையார் "ஒட்டா மதிகெட்டாய்!” என்று கூற, கூத்தர் தலைகவிழ்ந்தார்.

பின்னர் புகழேந்தியார், 'பங்கப்பழனத்து' எனத் தொடங்கும் பாடலைச் சொல்லி மூன்று பிறை முறையே வரச்செய்து, அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.

தாம் தோற்றுப் புகழேந்தி பாராட்டப் பெற்றதைக் கண்ட கூத்தர் சினங்கொண்டார். “எம்மைப் பாடச் சொன்ன தாமே பாடுதற்கு இயலுமோ?” என்றார்.

“மூன்றென்ன? நான்கு பிறையே வருமாறு பாடுவேன்” என்று உரைத்து, ஒளவையார் பாடிய செய்யுள் இது;

செம்மான் கரத்தனருள் சேயா நெடியோனை
அம்மான் எனப்பெற்ற அருள்வேலா - இம்மான்
கரும்பிறைக்கும் வெண்பிறைக்கும் கண்ணம் பிறைக்கும்
அரும்பிறைக்கும் கூந்தல் அணை.

"செவ்விய மானினைக் கையில் ஏந்திய சிவபிரான் பெற்றருளிய சேயோனாகிய முருகப்பிரானே! நெடியோன் ஆகிய திருமாலைத் தாய்மாமன் எனப்பெற்று அருள்புரியும் வேலாயுதனே! மான் போன்ற இந்த மாது, கரும்பினை வில்லாக உடைய மன்மதனின் செயலாலும், வானத்தே வெண்பிறை தோன்றலாலும், கண்கள் நீர்த்துளிகளைச் சிதறும் நிலையினள் ஆயினாள். மலரரும்புகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் இவள் கூந்தலே நின் அணையாகக் கொண்டு, இவளைக் கூடி இன்புறுத்துவாயாக" என்பது பொருள்.