பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

ஔவையார் தனிப்பாடல்கள்



45. கோடிக்கு ஒருவன்

தென்னாடுடையோனாகிய பாண்டியன் தமிழார்வம் மிக்கவன். தமிழ்ப்புலமை உடையவரைத் தாங்கிக் காத்துத் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழாய்ந்து சிறந்தவன் அவன்.

ஒரு சமயம், அவனுடைய அவைக்கண் புலவர்கள் என்று கூறிப் பலர் வந்து நிறைந்தனர். அவர்களுட் சிலர் உண்மையாகவே கற்றறிந்த சான்றோர் என்பதனை அவனும் அறிவான். எனினும் தமிழ்ச் செய்யுள் யாத்தல், கொற்றன் ஒருவன் செங்கற்களை அடுக்கிச் சுவர் எழுப்புவது போன்ற செயல் அன்று; அது தெய்விக சக்தியுடன் உள்ளத்தில் தோய்ந்து உயிரிற் கலந்து வெளிவருவது; இந்த உண்மை மெய்ப்பிக்கப்படல் வேண்டும் என நினைத்தான் அவன். அதனால், ஒரு போட்டியினையும் ஏற்படுத்தினான்.

தன் கோயிற்கூடத்து ஒருபுறமாக ஐந்து பொன் முடிப்புக்களைக் கட்டி வைத்தான். அவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் பொன் இருந்தன. அவற்றை அற்று விழுமாறு பாடுதல் வேண்டும். அப்படிப் பாடுகிறவர்கள், அந்த முடிச்சுகளைத் தாமே எடுத்துக் கொள்ளலாம்’ என்று எங்கும் பறையொலிக்கச் செய்தான். புலவர்கள் ஆர்வத்தோடு சென்றனர். பாடிப்பாடி ஓய்ந்தனர். ஆனால் பொன் முடிச்சுகள் ஏதும் அற்று விழவேயில்லை.

மதுரைக்குச் சென்ற ஒளவையார் அதனைக் கண்டார். அது அற்று விழாதிருப்பது தமிழ் பாடும் தம் போன்றோர்க்குப் பழியாகும் என நினைத்தார். பொன்னின் அதிதேவதையான திருமகளைத் தியானித்தவாறு ஒரு செய்யுளைப் பாடலானார்.

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு.

"குளிர்ச்சியான இதழ் விரிந்து மலர்ந்த செந்தாமரை மலரிடத்தே வீற்றிருக்கும் திருமகளே! நூற்றுக்கு ஒருவர்தாம் தக்க அவையில் இருக்கத்தக்கவர். ஆயிரத்தில் ஒருவர்தாம் புலமையாளராக இருப்பார்கள். அவருள் பேச்சுத்திறனும் உடையவர் பதினாயிரத்துக்கு ஒருவராகவே விளங்குவர். கொடை வள்ளலாகத் திகழ்பவரோ கோடிக்கு ஒருவரைத்தான் காணலாம். இஃது உண்மையாயின், உண்மையென்று காட்டுவதுபோல் நீயும் அற்று வீழ்வாயாக" என்பது பொருள். இதனைப் பாடியதும் ஒரு முடிப்பு அறுத்து வீழ்ந்தது. அவையும் அரசனும் வியந்து மகிழ்ந்தனர்.