பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஒரு நாள் இந்த முயற்குட்டி காட்டிலே மற்ற முயல்களோடு சேர்ந்து ஓரிடத்தில் புல் மேய்ந்துகொண்டிருந்தது. அப்பொழுது வானத்திலே கருமையான மேகங்கள் எங்கும் பரவின. மின்னல் 'பளீர் பளீர்' என்று மின்னத் தொடங்கியது. திடீரென்று ஒரு பெரிய இடி முழக்கம் பூமியே அதிரும்படி கேட்டது.

அதைக் கேட்டதும் முயற்குட்டி "ஐயோ, பூமி கீழே விழுகிறது; கீழே விழுகிறது" என்று சத்தமிட்டுக்கொண்டு தாவித்தாவி ஓடத் தொடங்கிற்று. அது போடுகின்ற சத்தத்தைக் கேட்டு மற்ற முயல்களும் நடுங்கலாயின. "பூமி கீழே விழுகிறது" என்று அவைகளும் கத்திக்கொண்டு முயற்குட்டியின் பின்னால் தாவித் தாவி ஓடின.

ஓரிடத்தில் மான்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. முயல்களின் கூக்குரலைக் கேட்டு அவைகளும், "பூமி பாதாளத்தில் விழுகிறது" என்று கத்திக்கொண்டு முயல்களின் பின்னாலேயே ஓடத் தொடங்கின.

கரடிகள் மற்றோரிடத்திலே ஏதோ தமக்குள் பேசிக்கொண்டிருந்தன. அவைகளும் பயந்து "பூமி விழுகிறது; பூமி விழுகிறது" என்று கூவிக்கொண்டே மான்களைத் தொடர்ந்து ஓட்டம் பிடித்தன.

சிறுத்தைகளும் புலிகளும் நன்றாக இருட்டான பிறகு இரைதேடச் செல்லுவதற்காக அவற்றின் குகைகளில் பதுங்கி இருந்தன.