பக்கம்:கடற்கரையினிலே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கடற்கரையிலே


எழுதினான்; எட்டுத் திசையிலும் அவ்விசைக் கொடியை நாட்டினான்; முடிமன்னரெல்லாம் அவன் அடி பணிந்தார்கள். வெற்றிமேல் வெற்றியடைந்தபோது அவன் தலை கிறுகிறுத்தது. 'மாநில முழுவதும் எனதே' என்ற மமதை கொண்டான் அவன்; ஆகாயத்திலும் ஆணை செலுத்த விரும்பினான்; அதற்குத் தடையாக இமய மலையே நின்றாலும் அதைத் தட்டி வீழ்த்தத் துணிந்தான். ஒரு நாள், ஈசனார் வீற்றிருக்கும் இமயமலையைக் கடந்து செல்ல மாட்டாது இறங்கிற்று அவன் விமானம். 'ஐயனே! இது கயிலாய மலை; இதைக் கடந்து விமானம் செல்லாது என்று அறிவுறுத்தினான் அவன் ¹வலவன். அம்மொழி அரக்கர் கோன் செவியில் ஏறிற்றோ? கயிலாயம் என்ற சொல்லைக் கேட்டபொழுது அவனுள்ளம் கசிந்ததா? கடுமதியால் அவன் கடுகடுத்தான்; தருக்கும் செருக்கும் தலைக்கொண்டான். அந்தோ! ஆணவத்தின் கொழுந்தாகிய அரக்கன் வெள்ளி மாமலையை அள்ளியெறிய முயன்றானே ! ஈசனையே அசைத்து விடலாம் என்று எண்ணினானே! அவன் கற்றதனால் யாது பயன்? வரம் பெற்றதனால் என்ன நலன்? செருக்குற்றவர் சீரழிவர் என்பதற்கு அரக்கர் கோன் ஒரு சான்றாயினன்; அசைத்துப் பெயர்த்த கயிலாய மலையின் கீழ் அகப்பட்டுக் கதறினான்; தவறு செய்ததை உணர்ந்து பதறினான்; இன்னிசை பாடினான். கருணையே


1. வலவன் = வான ஊர்தியை இயக்கும் பாகன் :

இவனை ஆங்கிலத்தில் (Pilot என்பர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/32&oldid=1248540" இலிருந்து மீள்விக்கப்பட்டது