பக்கம்:கடற்கரையினிலே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

31


உருவான எம்பெருமான் அரக்கன் செய்த பிழையையும் பொறுத்தான்; நாளும் வாளும் தந்து நல்லருள் புரிந்தான்.²

"ஆழ்ந்தகன்ற அருங்கடலே !ஆண்டவன் அளித்த வாளின் வன்மையால் புறப் பகையையெல்லாம் அடக்கினான் இவ்வரக்கன். ஆயினும், அகப்பகையாகிய காமத்தை அடக்கும் வலிமை பெற்றானில்லையே ! ஆண்மையுள் எல்லாம் சிறந்த ஆண்மை பேராண்மை - என்பது அது வன்றோ? பிறன் மனை நோக்காத ஆண்மையைப் பேராண்மை என்று வள்ளுவரும் பாடினாரே ! பேராண்மை பெற்ற இராவணன் பேராண்மை பெற்றான் அல்லன் ! இன்பத் துறையில் எளியன் ஆனான்; மற்றொருவன் மனைவியை - மாசிலாக் கற்பினாளை - வஞ்சித்துக் கவர்ந்தான் ! அறம் மறுக, ஆண்மை மாசுற, அம்மங்கையை அசோகவனத்தில் சிறை வைத்தான்; கல்லும் கரைந்துருகக் கற்பின் செல்வி கண்ணிர் வடித்தாள். அவள் அழுத கண்ணிர் அரக்கர் குலத்தை அறுக்கும் படையாயிற்று; வில்லின் செல்வனாகிய இராமனை இலங்கைக்கு வரவழைத்தது. பொன்னகரினும் சிறந்த இலங்கை மாநகரம் போர்க்களமாயிற்று.




2. "கடுகிய தேர்செலாது; கயிலாயம் ஈது

கருதேல் உன்வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதம்மம் எனநின்ற பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்றுசென்று விரைவுற் றரக்கன்
வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
நினைவுற்றது என்தன் மனனே"

- திருநாவுக்கரசர் தேவாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/33&oldid=1248541" இலிருந்து மீள்விக்கப்பட்டது