பக்கம்:கடற்கரையினிலே.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கடற்கரையிலே


"அவர் அருள் வாக்குப் பெற்ற நீ, மேன்மேலும் வளமுற்றாய்; வனப்புற்றாய்; தமிழகத்தை ஆளும் பல்லவ மன்னரின் செல்வப் பாவையாய் விளங்குகின்றாய். மாமல்லன் என்னும் மாநில மன்னன் சிறப்பாக உன்னைச் சீராட்டினான். அவன் பல்லவர் குல திலகன்; பகைவரை வென்று அடக்கிய வீரன்; வட நாட்டிலுள்ள வலிமை சான்ற வாதாபிக் கோட்டையைத் தகர்த்தெறிந்த தலைவன். அவ்வீர வேந்தன் உன்பால் அன்பு கொண்டான். காவிரித் துறைமுகத்தைத் திருத்திய திருமாவளவனைப்போல், உன் துறையைத் திருத்தியமைத்தான் மாமல்லன். அன்று முதல் * மாமல்லபுரம் என்ற பெயரும் உனக்கு அமைவதாயிற்று.

"மல்லை மாநகரே ! மாமல்லன் அரசு வீற்றிருந்த நாளில் நீ அடைந்த புகழுக்கு ஒர் அளவுண்டோ? கடல் சூழ்ந்த இலங்கையின்மீது படையெடுத்தான் மாமல்லன். அப்படையின் பரப்பையும் சிறப்பையும் நீ நன்கு அறிவாயே ! உன் துறைமுகத்திலன்றோ அச்சேனை வெள்ளம் கப்பலேறி இலங்கையை நோக்கிச் சென்றது? மண்ணாசை பிடித்தவனல்லன் மாமல்லன். அவன் இலங்கையை வென்று அரசாள விரும்பினானல்லன். அந்நாட்டு மன்னன் மானவர்மன், மாற்றார் செய்த சூழ்ச்சியால் நாடு இழந்து மாமல்லனை வந்தடைந்தான். அவன் வடித்த கண்ணிர், மல்லன் உள்ளத்தைக் கரைத்தது. தஞ்சமடைந்தோரைத் தாங்கும் தகைமையாளன் மாமல்லன்; அற்றார்க்கும் அலந்தார்க்கும் உற்ற தோழன்; ஆதலால், தன்னந் தனியனாய் வந்து தஞ்சமடைந்த மானவர்மன் நிலை கண்டு மனம் இரங்கினான்; அவனது


★ மாமல்லபுரம் என்ற பெயர் மகாபலிபுரம் என மருவி வழங்குகின்றது.