பக்கம்:கடற்கரையினிலே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டித சோழன்

45


பெருக்கினேன். கங்கையும் காவிரியும் கலந்த ஏரியில் என்றும் நீர் பொங்கிப் பெருகவேண்டுமென்று இறை வனைத் தொழுதேன். அப்போது 'ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்' என்ற தமிழ்ப்பாட்டை இசைவாணர் அந்த ஏரியின் கரையில் நின்று பாடினர். அது கேட்டு என் உள்ளம் உருகிற்று. சோழ கங்கத்தின் கருணையால் வெற்றிடமெல்லாம் இப்போது விளைநிலமாயிற்று; காடு மேடெல்லாம் கழனியாயின. சோழநாட்டை வளநாடாக்கி வளவன் என்ற பெயரை எம் குலத்தார்க்கு வழங்கிய ஆதிமன்னன் - திருமாவளவன் - 'குளம் தொட்டு வளம் பெருக்கினான்' என்று பட்டினப்பாலை பாராட்டுவதைப் படித்தேன். ஒல்லும் வகையால் அவ்வளவனைப்போல் வேளாண்மையை ஆதரிக்க ஆசைப்படுகின்றேன். படையாற்றலினும் பசியாற்றலே சிறந்த தென்பதை எண்ணி எண்ணி மனம் களிக்கின்றேன். கங்கை கொண்டேன்; பயிர் முகம் கண்டேன். ஆதலால், ' கங்கை கொண்டான் என்ற விருதுப் பெயரைப் போற்றுகிறேன்.

"வளவன் நாட்டுத் துறைமுகமே ! இந்நாட்டில் பசி ஒழிந்தால் மட்டும் போதுமா? பொருளும் பெருக வேண்டும் என்பது என் ஆசை. தாழ்விலாச் செல்வம் வாணிகத்தால் வரும். இதை உணர்ந்தன்றோ தமிழ்நாட்டு மூவேந்தரும் துறைமுக நகரங்களைக் குறிக்கொண்டு காத்தனர் ! சோழ நாட்டுக் கரையிலே திருமாவளவன் திருத்தியமைத்த பூம்புகார் நகரம் யார் செய்த தீவினையாலோ அழிந்துபட்டது. ஆயினும், நாகபட்டினமே ! உன்னைக் கண்டு ஒருவாறு வாட்டம் தீர்ந்தேன். அந்நாளில் புகார் நகரத்தில் நிகழ்ந்த வாணிகம் இந்நாளில் இங்கு நடைபெறுகின்றது. பல இனத்தார், பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/47&oldid=1248477" இலிருந்து மீள்விக்கப்பட்டது