பக்கம்:கடற்கரையினிலே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர்

59


"முல்லையும் கடல்முத்தும் எதிர்ப்பினும்
வெல்லும் வெண்ண கையாய் !"

என்று ஐயன் சொல்லியதை இங்கு நினைப்பூட்டி எல்லையற்ற இடர் தந்தாயே !இப்பொழுது அவ்வீரன் மனம் முறுகி நிற்கின்றது; வீணாகக் காலம் கழிகின்றதே என்ற விறுவிறுப்பு எழுகின்றது; பரபரப்புண்டாகிறது. வரை கடந்த சீற்றத்தால் அவன் வரிசிலை யெடுத்து வளைப்பானாயின் இவ்வுலகம் என்னாகும்? சரமாரியால் சராசரமெல்லாம் சாம்பராய் விடுமே !

"நித்திலம் விளைக்கும் நெடுங்கடலே ! உன் முகத்தைக் கண்டு பெருங் கோபமும் தாபமும் பிறந்தாலும் அவற்றை அடக்கும் திறம் உடையவன் அவ்வீரன்; செம்மை சான்ற நெறி திறம்பி, ஒருபோதும் வெம்மை விளைக்க அவன் ஒருப்பட மாட்டான். 'பொறுத்தார் பூமியாள்வார். பொங்கினார் காடாள்வார்' என்னும் முதுமொழியின் உண்மையறிந்து வாழ்பவன் அவன்; 'என்றும் அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்ற கொள்கையை நன்றாக மனத்திற் கொண்டவன்; அரக்கர் செய்த தீமைக்காக அனைத்துலகையும் ஒழிக்க ஒருபோதும் கருதமாட்டான். இத்தகைய வீரனுக்குத் துணை புரிதலன்றோ உனக்குப் பெருமை தரும்? காலத்திற் செய்த நன்றி சிறிதெனினும், அது ஞாலத்தின் மாணப் பெரிது என்பது பொய்யாமொழி யன்றோ? அறவோரை ஆதரிக்கும் ஆழியே, வாழி ! அல்லோரை அழித்தொழிக்கும் ஆழியே, வாழி !" என்று வாழ்த்தி வணங்கினார் கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/61&oldid=1248506" இலிருந்து மீள்விக்கப்பட்டது