பக்கம்:கடற்கரையினிலே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கடற்கரையிலே


பேசினேன். மானமிழந்து வாயிழந்து மறைந்தான் ஜெயிலர்.

" தமிழ்ப் பெருந்துறையே ! உன் தாழ்விலும் வாழ்விலும் எந்த நாளிலும் - என் தமிழ்த்தாயை நான் மறந்தறியேன்; இந்த நகரத்தில் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித் துரைத் தேவரோடு உறவு கொண்டு, தமிழ் நூல்களைக் கற்றேன். அதனால் நான் அடைந்த நன்மைக்கு ஒர் அளவில்லை. சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ? தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லை யெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களை யெல்லாம் வென்றேன். ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை 'மனம் போல் வாழ்வு' என்று தமிழிலே மொழி பெயர்த்தேன். உயர்ந்த நூல்களிற் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு 'மெய்யறிவு', 'மெய்யறம்' என்ற சிறு நூல்களை இயற்றினேன். இவற்றை என் தமிழ்த்தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தேன். சிறையிலிருந்து நூற்ற என் சிறு நூல்களையும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு செந்தமிழ்த் தாயின் திருவருளை வேண்டுகிறேன்.

"வருங்காலப் பெருவாழ்வே ! காலம் கடிது சென்றது. என் சிறை வாழ்வு முடிந்தது. இந்நகரை வந்தடைந்தேன். என் அருமைக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தமுற்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/98&oldid=1247697" இலிருந்து மீள்விக்கப்பட்டது