பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18



வற்புறுத்தியிருந்தார். கூடவே ஒரு கடல்வழி காட்டும் நிலப்படமும் அனுப்பியிருந்தார். இதைக் கேள்விப்பட்ட கொலம்பஸ் உடனே அந்தப் பிளாரென்ஸ் பட்டணத்து ஞானிக்கு ஒரு கடிதம் எழுதித் தனக்கு மேற்கொண்டு விபரங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவர் மகிழ்ச்சியோடு, அவனுடைய ஆவலை ஆதரித்து ஊக்கப் படுத்திக் கடிதம் எழுதியதோடு, அவனுக்கும் ஒரு கடல் வழி காட்டும் நிலப்படம் அனுப்பிவைத்தார். பிற்காலத்தில் இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்க அவன் பயணம் மேற்கொண்டபோது, அந்த நிலப்படத்தையும் கையோடு கொண்டு போயிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

கொலம்பசுக்குத் தன் எண்ணத்தை வலியுறுத்தும் ஆதாரங்கள் எல்லாம் கிடைத்த பிறகு, அதைச் செயற் படுத்திப் பார்க்கவேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது. ஆனால், தனியொரு மனிதனாக நின்று செய்யக்கூடிய செயல் அல்ல இது. அரசாங்கத்தின் ஆதரவும், வழிச் செலவுக்குப் பணமும் நிறையத் தேவையாயிருந்தது. முன் பின் தெரியாத புதுவழியில், எத்தனை நாள் என்று சொல்ல முடியாத பயணத்தை மேற்கொள்வதென்றால் யாராவது ஓர் அரசரின் ஒத்தாசையில்லாமல் முடியாது.

1484-ஆம் ஆண்டில் போர்ச்சுக்கல் அரசர் இரண்டாவது ஜானிடம் அவன் தன் நோக்கத்தை வெளிப்படுத்தி உதவிபெற முயன்றான். புதிய கண்டுபிடிப்புக்களில் ஆர்வங்காட்டிய பழைய ஹென்றி இளவரசனின் மருமகன் ஜான். ஆகவே அவர் தன் முயற்சிக்கு ஆதரவளிப்பார் என்று கொலம்பஸ் எதிர்பார்த்தான்.

கொலம்பஸின் வேண்டுகோளை ஆராய்ந்து முடிவு கூறும்படி ஒரு குழுவை அமைத்தான் ஜான் அரசன்