பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

திரும்பும் வழியில் அவர்கள் இரண்டு கப்பல்களையும் இஸ்பானியோலா கரையோரமாகவே செலுத்திக் கொண்டு போனார்கள். அவ்வழியில் இன்றும் அம்பு முனை என்று அழைக்கப் படுகிற இடத்தை அடைந்தவுடன் அம்புகளை உபயோகப்படுத்தும் குடிமக்களை முதன் முதலாகக் கண்டார்கள். அந்தக் குடிமக்கள், வெள்ளையர்களை வெறுப்புக் கண்ணோடு நோக்கினார்கள். டாயினோக்களின் ஒரு பிரிவினரான சிகுவாயோ இனத்தைச் சேர்ந்த இக்குடி மக்கள் கரிபிய இனத்தினரிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அம்புகளைப் பயன்படுத்தி வந்தார்கள். சிகுவாயோ ஒருவனைப் பிடித்து அவனை அன்புடன் நடத்திப் பரிசுகள் கொடுத்து அனுப்பிக் காட்டியதன் மூலம் அவர்கள் வெறுப்புணர்ச்சியைத் தணிக்க முடிந்தது. இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையோடு அவர்களிடம் வியாபாரம் நடத்த வேண்டியிருந்தது. ஏற்கெனவே கப்பலில் ஸ்பெயினுக்குக் கொண்டு போக ஏற்றியிருந்த சிலரோடு, சேர்ந்து கொள்ளும்படி கேட்டதில் அங்கிருந்து ஒன்றிரண்டு பேர் கப்பலில் ஏறிக் கொண்டார்கள்.

மாட்டினினோ என்ற தீவில் கரிபியப் பெண்கள் மட்டுமே இருந்து வருவதாகவும் அங்கு ஆண்டுக்கொரு முறைதான் ஆண்கள் போகமுடியு மென்றும், குறிப்பிட்ட காலம் ஆனபின் அங்கு வந்த ஆண்கள் அனைவரையும் பெண்கள் விரட்டி விடுவார்களென்றும் கொலம்பஸ் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் உண்மை அப்படியில்லை. கரிபியப் பெண்கள் ஆண்களோடு சரிநிகர் சமானமாக நின்று பகைவருடன் போராடுவார்கள். ஆண்கள் துணையில்லாத போது தனித்து நின்று போராடவும் தயங்க மாட்டார்கள். கொலம்பஸ் அந்தத் தீவில் இறங்க எண்ணியிருந்தாலும், தாய் நாடு செல்லத் தோதாகக் காற்று அடிக்கத் தொடங்கியதால், விரிந்த ஆழ்கடலில் இரண்டு கலங்களையும் செலுத்திக் கொண்டு புறப்பட்டு விட்டான்