பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


‘இப்படிப்பட்ட வைரக் கற்களை நான் என் வாழ்நாளிலே பார்த்தது கிடையாது! இனிமேலும் பார்க்கப் போறது இல்லிங்க!’

நடேசன் உண்மையிலேயே மயங்கித்தான் போனார், அவரது மனம் எதற்காகவோ கனமாகி வருவதுபோல் தோன்றியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.

“நடேசன்! சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்கவேண்டும் இப்பொழுது நான் காட்டினேனே! இது எங்கள் பரம்பரைச் சொத்து, என்பாட்டனாருக்குப் பாட்டனார், பர்மாவில் பெரிய வைரவியாபாரியாக விளங்கினார். அவர் எவ்வளவோ வைரங்களைப் பார்த்திருந்தாலும், இக்கற்களின் மேல் ஆசைப்பட்டு, எவ்வளவோ பணம் கொடுத்து வாங்கி, தனது குடும்பச் சொத்தாக வைத்துக்கொண்டார்.”

எங்கள் குடும்பத்திலே வாரிசு ஒன்றே ஒன்றுதான் வந்தது. என் பாட்டனாருக்கு என் தாத்தா ஒரே மகன், என் தாத்தாவுக்கு என் தந்தை ஒரே மகன், என் தந்தைக்கு நான் ஒரே மகன்.

“எனக்குத்தான் குழந்தையேயில்லை”