பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குழந்தைகளை மறந்தும் மறக்காமலும் அப்படியே நடுவீட்டில், தரையில் அமர்ந்து கொண்டார் நடேசன். ஒரு வாரமாய் சவரம் செய்யாமல் வளர்ந்து போன தன் தாடியை சொறிந்தவாறு அண்ணாந்து பார்த்தார். மாலை நேரத்து சூரிய வெளிச்சம், வேண்டாத விருந்தாளியைப் போல, கூரைக்குள்ளே புகுந்து வட்ட வட்டமாகத் தரையில் வண்ணக் கோலம் போட்டுக் கொண்டிருந்தது. வானமும் கூரை வழியே நன்றாக ஆங்காங்கே தெரிந்தது.

கண் கூசுகிறது என்று குனிந்து தன் வேட்டியைப் பார்த்தார். ஆங்காங்கே குறுக்குத் தையல் போட்ட பாகங்கள், மூலை காட்டிக் கேலி செய்து கொண்டிருந்தன.

என்னங்க அப்படி யோசனை? எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீங்க! என்றவாறு அவரது மனைவி பார்வதி, பக்கத்திலே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

‘இனிமேல் ஒல்லியாகப் போக முடியாது’ என்பது போல இளைத்துப் போன தேகம். அவளை ஏற இறங்க ஒருமுறைப் பார்த்தார் நடேசன், குழிவிழுந்த கன்னங்கள் கலைந்த கேசம். வறுமை தாக்கியதால் வதங்கிப்போன முகம்.