பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தன் மகன் எங்கே அவளிடம் ஏதாவது உளறி விடுவானோ என்று அஞ்சி, அவளிடம் தனியே இருக்காதவாறு, தன் மகன் முருகனையும் பார்த்துக் கொண்டார்.

‘இரவு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், இந்த பலகாரப் பொட்டலம் தேவைப்படுகிறது’ என்று பைக்குள்ளே பொட்டலத்தை வைக்கும்பொழுது கூறினார். அவருக்கு ஒரு ஆறுதல், சிவகாமிக்கோ முகம் மாறுதல்.

அண்ணனின் பேச்சும் நடத்தையும் அவளுக்கு சந்தேகத்தை ஊட்டியது. இருந்தாலும், என்ன இப்படிப் பேசுகிறீர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்கப்பயந்து, அவளும் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்; ஆசை வந்துவிட்டால், பாசம் எப்படி மறைந்து போகிறது பார்த்தீர்களா!

இராமேசுவரம் இரயிலில் ஏறிக் கொண்டு, கையசைத்து விடை கொடுத்தார் அற்புதசாமி, தங்கை சிவகாமியும் ஏதோ கையை ஆட்ட வேண்டும் என்பதற்காக, சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு, விடை கொடுத்தாள். மெளனமான போராட்டம் அண்ணன் தங்கையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.