பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


யைக் கொன்று தின்னும்படி கடவுள் ஏன் அமைத்தார்? இஃது அறிவுள்ள செயலா?

மிகச் சிறிய பூச்சியைப் பாசிப் பூச்சி தின்கிறது - பாசிப் பூச்சியைக் கரப்பான் பூச்சி தின்கிறது-கரப்பான் பூச்சியைப் பல்லி விழுங்குகிறது-பல்லியைப் பூனை விழுங்குகிறது - இப்படியே மற்ற-மற்ற உயிரிகளும் செய்து கொண்டிருக்கின்றன. மலைப்பாம்பு, புலி,கரடி, சிங்கம் முதலியன மற்ற உயிர்களை உண்பதல்லாமல், மக்களையே கொன்று பசியாறுகின்றன. மக்களோ எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கிறார்கள். இந்தப் பொல்லா முரண்பாடு அமைப்பு ஏன்? பிற உயிரிகளைக் கொன்று தின்னக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரைகள்-உபதேசங்கள் வாரி வாரி வழங்கப்படுகின்றன; ஆனால், பிற உயிரிகளைக் கொன்று தின்னக் கூடாது என்று மக்கள் அல்லாத மற்ற உயிர்களுக்கு யார் அறிவுரை கூறித் திருத்த முடியும்! மக்களே இன்னும் திருந்த வில்லையே! கீழே ஊர்வனவற்றில் வண்டி வகைகளைத் தவிர-மேலே பறப்பவற்றில் காற்றாடி, வான ஊர்தி, இராக்கெட் போன்றவற்றைத் தவிர - மற்ற யாவற்றையும் மக்கள் தீர்த்துக் கட்டுகின்றனரே!

ஒன்றை ஒன்று கொன்று தின்னக் கூடாது என்று கடவுள் உயிர்களுக்கு அறிவுரை பகரக் கூடாதா? அவர் அவ்வாறு அறிவுரை பகர்ந்தால், 'எங்களைப் படைத்து விட்டீர்களே-யாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?' என்று உயிரிகள் திருப்பிக் கேட்டால் கடவுள் என்ன பதில் பகரக் கூடும்? அவருடைய திருவிளையாடல் தானே இது? உயிரிகளின் இயல்பை நோக்குங்கால், உயிர் என்ற சொல்லுக்கு, தன்னலம் உடையது-மற்றதை ஏய்ப்பது மற்றதைக் கொன்று தின்பது-என்றெல்லாம் பொருள் கூறலாம் போல் தோன்றுகிறது.