பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4



இறப்புக்குப் பின்னாலே வீட்டு வானம்
இருக்கின்ற தென்கின்றார் ; உண்மையாயின்
நிறப்பளிங்குப் பட்டுடம்பை, அழுக்கில் லாத
நிலாமுகத்தைப் பொற்சரிகைக் கூந்தற் காட்டைச்
சிறைப்படுத்தித் தன்னிடத்தில் வைத்திருந்த
சிரிப்பழகி ஹெலனையங்குக் காணக்கூடும்.
மறக்கமுடி யாததிராய் நகரப் போரில
மடிந்தபெரு மன்னரையும் காணக் கூடும்.

போர்க்களத்தைப் புயலாக்கி மாற்றார் மார்பில்
புதுப்புண்கள் ஏற்படுத்தி, வீரர் நட்ட
வேர்ப்புகழைத் தான்படைத்த பாட்டின் முன்னால்
வெறும்புகழாய் ஆக்கிவைத்த ஹோமர் என்னும்
கார்ப்பருவ மழைமேகக் கவிஞ னோடு
கலந்திருக்க லாமன்றோ ? மேலும் அங்கே
பார்ப்பவரை நான்குறுக்குக் கேள்வி கேட்டால்
பருகுதற்கு நஞ்செனக்குக் கொடுக்க மாட்டார்.

ஊனுடம்பைத் தசைச்சுரங்கக் குருதிக் கால்வாய்
ஒட்டத்தைப் பெற்றிருப்ப தாலே, நானும்
மானிடன்தான் உங்களைப்போல் ! இன்ப துன்ப
மழைவெய்யில் எனக்குமுண்டு! கொடுமைக் கஞ்சிக்
கூனுவதும் செய்யாத குற்றத் துக்குக்
குலைநடுக்கம் கொள்ளுவதும், நடுவர் உள்ளம்
தானிரங்கக் கண்ணீரால் விண்ணப் பித்துத்
தவிப்பதுவும் என்னிடத்தில் என்றும் இல்லை.