பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


தரும் தீர்ப்பு நீதிக்கே அன்றி, நெஞ்சைத்
தடவுகின்ற என்பேச்சுக் காக வேண்டாம்!
நெருங்கிவரும் சாவுக்குத் தப்பி வாழ
நினைப்பது என் நோக்கமன்று ! சூழ்ச்சி என்று
தெரிந்திருந்தும் கொடுமைக்குத் தலைவணங்கும்
தீர்ப்புக்கே அஞ்சுகிறேன் , நேர்மைக்காக
எரிநெருப்பில் குளிப்பதற்கும் தயங்கமாட்டேன்!
இறைச்சிக்குக் குழந்தையினைக் கொல்லலாமா ?

விண்ணைவிட மிகப்பெரிய போர்வை யில்லை
வெங்கதிரோன் போல்பெரிய விளக்கு மில்லை
என்னுடைய தொண்டைவிடப் பெரிய தொண்டும்
இந்நாட்டில் இனிநிகழப் போவ தில்லை
மண்ணுலகில் என்னறிவை முதலாய் வைத்தே
மதிப்புலமை வளர்ந்தாக வேண்டும் ? நீல
விண்மீது விடிவெள்ளி எழுந்த பின் தான்
வெயில்வட்டம் இருள்கிழிக்கும் தலையை நீட்டும்.

கொல்லவந்த நல்லவரே ! உங்கட் கொன்று
கூறுகிறேன் ; வல்லவர்கள் சாகும் போது
சொல்லுகின்ற சொல்லுக்கு வலிமை யுண்டு;
சுழற்காற்று கட்டாயம் மாறி வீசும்.
கல்லெடுத்து வீசுகிறீர் ! எதிர்கா லத்தில்
கட்டாயம் உம்மீது மலையே வீழும்!
நில்லென்று நீர்க்குளத்தில் தள்ளு கின்றீர்;
நெருப்பாற்றில் நீர்மூழ்க வேண்டி நேரும் !