பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



புள்ளியில் லாத மானையும் படைத்துச்
சக்கை வாழ்க்கையைச் சாறுள்ள தாக்கினான்.
ஓட்டை மூங்கில் வாழ்க்கை, இன்னிசை
ஒழுகும் புல்லாங் குழலா கியது.
கொழுமுனை கிழிக்கா வெறும்நில வாழ்க்கை
வளமான சேற்று வயலாகியது.
புதுப்புதுப் போதுகள் விரியக் கண்டு
மதுமலர் வாழ்க்கையை வண்டுகள் தொடங்கின,
கலைமான் பிணையைக் கண்டு கனைத்தது.

கள்ளை வாழ்க்கையில் காட்டிய ஆண்டவன்
எல்லைக் கோட்டையும் அவர்களுக் கமைத்தான்.
இழுக்க இழுக்க ஏவும் கணைகள்
எதிர்த்திசை நோக்கித் தாவுதல் போல
இறைவன் தடுத்த வேலையை, அப்பெண்
மறைவாய்ச் செய்தாள்: மண்ணில் உடனே
மொக்குள் அம்மையும், நாய்போல் குரைக்கும்
கக்குவானும் காய்ச்சலும் தோன்றின;
பலவலி வந்தது; பட்டால் தைக்கும்
முள்ளைப் பெற்று முளைத்தது ரோசா;
வளைந்து செல்லும் வழக்கப் பாம்புகள்
நச்சுப் பற்களால் நடுங்க வைத்தன;
சண்டை அரசியல், சமயம் தோன்றித்
துண்டுதுண் டாக உடைந்தது மானிடம்.
இத்த னைக்கும் ஈவா என்னும்
முத்து மாலையே காரணம் என்று
சமயக் கணக்கர் சாதிக் கின்றனர்.
இருப்பினும் ஆண்டவன் இருந்து பேரின்பம்
பெருக்கும் வீட்டுவான் உலகைக் காட்டிலும்
மண்ணுல கத்தைப் பொன்னுல காக்கும்
பெண்ணுல கத்தையே பெரிதும் விரும்புவேன்.