இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கூடல் நகர்
பெற்ற பாடல்
பேரறிஞர் அண்ணா அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவுக்கு வரலாற்றுச் சிறப்புண்டு. தமிழ்நாட்டில்,தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், ஒரு தமிழர் முதன்முதலாக நிகழ்த்திய தமிழ்ப் பேச்சு இது. இப்பேச்சே ஒரு கவிதை. நான் இதை விருத்தப்பாவில் நிறுத்தியிருக்கிறேன்.
விழுப்புண்கள் பெற்றநகர் ; இலக்கி யத்தில்
விழாதபுகழ் பெற்றநகர் ; தொன்று தொட்டுச்
செழித்துவளர் தமிழ்மரபைக் கட்டிக் காக்கும்
சிறப்பான வேலிநகர் ; சங்கச் சான்றோர்
எழுத்துக்கள் எழுந்துவந்து தமிழ்ச்சிறப்பை
ஏற்றுமதி செய்யுநகர் ; வெற்றியாலே
கொழுத்தபுகழ்ப் பாண்டியர்கள் கொலுவி ருந்த
கூடல்நகர், பாடல்நகர் வெற்றிக் கோட்டம்.