பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


புதியதொரு உலகத்தைச் செய்வோம் என்று
புரட்சிப்பா பாடியவர், உம்பால் கொண்ட
அதிகமதிப் பாலன்றோ இக்க ருத்தை
அஞ்சாமல் எடுத்துரைத்தார்; பாயும் வைகை
நதிநிதியால் நாற்றங்கால் சிறக்கும்; இந்த
நன்னாடு மேன்மேலும் சிறப்ப தற்கு
மதியுடையார் பலர் வேண்டும்; அவரை இந்த
மதுரைப்பல் கலைக்கழகம் கொடுக்க வேண்டும்.

முழுவயிறு காணாதார், உழைத்து ழைத்து
முதுகெலும்பு முறிந்தவர்கள், பிறர் உழைப்பை
விழுங்குபவர் கைகளிலே பகடைக் காயாய்
விழுந்தவர்கள், ஒடப்பர் ஆகி யோர்மேல்
வழிகின்ற வியர்வையினால் அன்றோ, கல்வி
வளர்க்கின்ற கலைக் கழகம் எழுப்பி யுள்ளோம் ?
எழுந்துவரும் இளஞ்சிங்க அணிவ குப்பே !
இதையுணர்ந்து பொறுப்போடு நடந்து கொள்க!

கொடிப்பாதை மலைமீது சகடக் குன்றைக்
குனிந்திழுக்கும் எருதைப்போல், உழைத்தாலன்றிக்
கிடைக்காத குறிக்கோள்கள் நமது நாட்டுக்
கிருப்பதனை நீரறிவீர்; ஆகை யாலே
நடப்பதெது? நன்மையெது வென அறிந்து
நடக்கின்ற திறம்வேண்டும்; மயங்க வைக்கும்
கொடிப்பின்னல் பேச்சுக்குக் குனிய வேண்டாம்.
குயில்வேறு; கரிக்குருவிக் கூட்டம் வேறு.