பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93


திவானீ ஆம் மாளிகைக்கு எதிரில் அமைந்திருக்கும் வெளியில் நிலவங்காடி என்றொரு கடைத்தெரு இருந்தது. நிலாக்கால இரவுகளில் இவ்வங்காடி மிகவும் பரபரப்பாக இருக்கும். லாகூர் வாயிலுக்குள் மூடு அங்காடி (chattar chowk) என்றொரு. கடைத் தெருவும் உண்டு. இக்கடைத்தெரு மொகலாய வரலாற்றில் மிகவும் சிறப்பிடம் பெற்றது. இவ்வங்காடி அரச குடும்பத்தினர்க்கென்றே கூடியது. அரச குடும்பத்தார்க்கு வேண்டிய ஆடம்பரப் பொருள்களெல்லாம் இங்கு விற்கப்பட்டன. பாண்டி நாட்டிலிருந்து முத்தும், மேருவிலிருந்து மணியும், அரபு நாட்டிலிருந்து உயர்ந்த சாதிக் குதிரைகளும், கிரேக்கம், உரோம் முதலிய நாடுகளிலிருந்து பட்டும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து மதுவும் மணப் பொருள்களும், அரேபியா, பாரசீகம், பிரான்சு, வெனிசு முதலிய நாடுகளிலிருந்து அழகியரும் இவ்வங்காடியில் கொண்டு வந்து விற்கப்பட்டனர். குர்ரம் இளவரசன் (ஷாஜகான்) மும்தாஜை முதன் முதலாகச் சந்தித்த இடம் இதுவே. அரச குடும்பத்தாரைத் தவிர மற்றையோர் இங்கு நுழையக் கூடாது.

'இறப்பதற்கு முன் வாழ்வில் ஒரு முறையேனும் நேபிள்ஸ் நகரைக் கண்ணால் கண்டுவிட்டு இறக்க வேண்டும்' என்பது ஆங்கிலப் பழமொழி. இந்தியனாகப் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் இந்நாட்டின் தலை நகரான டில்லியை ஒரு முறையாவது கண்ணால் கண்டபிறகே இறக்க வேண்டும் என்றுரைப்பதும் முறையே.