பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


தஞ்சையில் சிவகங்கைச் சிறு கோட்டையின் தென்பகுதியில் இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டத் தொடங்கினர். இக்கோவிலின் நீளம் ஏறத்தாழ 242 மீட்டர். அகலம் ஏறக்குறைய 121 மீட்டர். கோபுரத்தின் உயரம் சிறிது ஏறத்தாழ 65 மீட்டர், 65 மீட்டர் உயரம் உடைய கோபுரத்தை நடுவிலே கொண்ட பெரிய கோவிலுக்கு இடும் கடைக்கால் எவ்வளவு ஆழமும் அகலமும் பெற்றிருக்க வேண்டும் எனச் சிற்ப நூல்வல்லார் கணக்கிட்டுக் கடைக்கால் வெட்டுவித்தனர்.

அடிக்கற்கள் நாட்டப்பட்டபின், கருவறையையும், அதைச் சுற்றித் திருச்சுற்றுகள் முதலியவற்றையும் சிற்பிகள் கட்டத் தொடங்கினர். தமிழகத்தில் பொதுவாகக் கோபுரங்களைக் கருவறைக்கு எதிரே தனியாக அமைப்பது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் இச்சிற்பியோ கோபுரத்தைக் கருவறைக்கு மேலேயே எழுப்பினான். இக்கோவிலும் கோபுரமும் கருங்கல்லால் கட்டப்பட்டவை. அக்காலச் சிற்பிகள் கல்லைக் கல்லோடு சேர்ப்பதற்கு ஒருவகைக் கூட்டு மருந்தைப் பயன்படுத்தினர்; அது அட்டபந்தன மருந்து என்னும் பெயரோடு வழங்கியது; கீழ்க்கல்லில் துளையும், மேற்கல்லின் கீழ்ப் பொருத்தும் அமைத்து, இடையில் மருந்திட்டுக் கல்லைக் கல்லோடு சேர்ப்பர்; கற்களின் அளவுத்திட்டம், ஒவ்வொரு கல்லிலும் செதுக்குதற்குரிய சிற்ப வேலைப் பகுதிகள் முதலியவற்றையெல்லாம் முன்னரே முடிவு செய்துவிடுவர்; பின்னர் மிகச் சிறியவற்றையும் தவறின்றிப் பொறுமையாகச் செய்யத் தொடங்குவர்.