பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


கோபுரத்தின் மேற்குப் பக்கத்து மதிலில் இலிங்கோற்பவர், அர்த்த நாரீச்சுவரர் ஆகியோரின் உருவங்கள் அழகாக வடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வடபுறத்தில் கங்காதரர், கலியாண சுந்தரர், மகிடாசுரமர்த்தனி ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருச் சுற்று மண்டபத்தின் தென் பக்கத்தைத் தவிர மற்றைய பகுதிகளில் மகாலிங்கங்களும், நாக கன்னிகைகளின் பதுமைகளும், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோரின் சிலைகளும் அழகுடன் காட்சியளிக்கக் காணலாம். தென்பக்கத்திலுள்ள விக்கிரமன் வாயிலில் பௌத்த சிலைகள் தென்படுகின்றன. இச்சிலைகள் இராசராசன் சமயப் பொது நோக்கிற்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் ஓர் ஐரோப்பியனின் உருவம் காணப்படுகிறது. இராசராசன் காலத்தில் யவனர், அராபியா போன்ற வெளிநாட்டு வணிகர்கள் வாழ்ந்தார்களல்லவா? அவர்களில் ஒருவனுடைய உருவமாக இது இருக்கலாம் என்று கருதுகிறார்கள். 'இச்சிலை இராசராசர் காலத்தில் வடிக்கப்படவில்லை; மராட்டிய மன்னர்களின் காலத்தில் அமைக்கப்பட்டது' என்று சிலர் கூறுகிறார்கள். 'பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை இரகுநாத நாயக்கர் சபையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவனான ரோலண்டு கிரேப் என்ற பிரித்தானியனின் வடிவமே இது' என்றும் சிலர் கூறுகிறார்கள். 'பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சுற்றுப்-