பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

உருண்டு திரண்ட தசை நார்களும், அச்சத்தை ஊட்டும் கண்களும், மீசையும் உடைய அரக்கர் அஞ்சாமையோடு போர் செய்கின்றனர். அச்சங் கொண்ட அரக்க மகளிர் தங்கள் வீரக் கணவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டு புலம்புகின்றனர். அரக்க மகளிர் மானிட மகளிரைப் போலவே மெல்லினத்திற்குரிய அங்க அழகுகளோடு காட்சியளிக்கின்றனர். இச்சுவருக்கு எதிரே உள்ள சுவரில், சுண்ணாம்புப் பூச்சுக்கு அடியில் பலவித அரிய அணிகலன்கள் அமைக்கப் பெற்ற திருமுடிகளைத் தரித்த நான்கு தேவர்களின் முகங்கள் தென்படுகின்றன. காதளவு நீண்டு ஒளிவிடும் கண்களும், வளைந்த புருவங்களும், காதிலும், கழுத்திலும் மிளிரும் பலவித ஆபரணங்களும் இம்முகங்களுக்குப் பேரழகூட்டுகின்றன.

பழைய இந்திய ஓவியங்களைப் போலவே, இவை யாவும் முதலில் எல்லைக் கோடுகள் வரைந்து பின்னர் வண்ணந் தீட்டப்பட்ட ஒவியங்களாகும். இக் கோடுகள் மிக நுண்மையான தூரிகைகளால் எழுதப்பட்டிருப்பது வெளிப்படை. தசையின் நிறத்தைக் காட்டத் தூய வெள்ளை, மஞ்சள், நீர்க்காவி, பச்சை ஆகிய வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விரல்கள், மூக்கு முதலிய உறுப்புக்கள் மிக நுண்மையாக வரையப்பட்டுள்ளன. பல வித ஓவிய வேலைப்பாடுகள் அமைந்த கரைகளை உடைய ஆடைகளும், பல வித முடியணிகளும், காதணிகளும், கழுத்தணி-