பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கினர் என்பதற்குப் பிரமிடுகள் சான்றுகளாக விளங்குகின்றன. இக்காலத்தில் மாபெரும் கட்டடங்களைக் கட்டுவதற்குப் பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்காலத்தில் உள்ள புதிய கருவிகளைப் போன்று, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லை.

நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள பெருங் கற்களை மேலே கொண்டு செல்ல ‘உயரத் தூக்கி’கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன. பண்டைக் காலத்தில் எகிப்தியர்கள் மிக எளிய முறைகளைக் கையாண்டு, பெருங்கற்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் சென்றனர். இம்முறை, ஒரு பிரமிடின் உட்சுவரில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. வானளாவிய ஒரு பெருஞ்சிலை. அச்சிலை பல நூறு டன் எடையுள்ளது. அதை உருளைகளின் மேல் ஏற்றி நூற்று எழுபத்திரண்டு பேர் அடங்கிய ஒரு மக்கட் கூட்டம் மணலின்மேல் இழுத்துச் செல்வதுபோல் அச்சிலை அமைந்துள்ளது. பெரும் பாறைகளை இழுத்துச் செல்லவும், மேலே தூக்கவும் அளவு கடந்த மக்களாற்றலே அவர்களால் பயன்படுத்தப்பட்டது.

எகிப்து நாட்டில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கல் தச்சர்களாகவும், கூலிகளாகவுமே வாழ்ந்தார்கள் எனலாம். அவர்களுடைய வயிற்றுக்கு அரைவயிற்றுச் சோறு வழங்கப்பட்டது. பாரோ மன்னர்களுக்குப் பிரமீடு எழுப்பும் வேலை, வாழ்க்கையின் குறிக்கோள்; மக்களுக்கோ அது வாழ்க்கைப் பிழைப்பு.